"எமர்ஜென்சி கதவு.." ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஷாக்.. பாத்ரூமில் சிகரெட் வேறு! நடுவானில் பரபர
சக பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட பயணியால் சலசலப்பு ஏற்பட்டது.
டெல்லி: மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர், சக பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் கடந்தாண்டு தான் டாடா குழுமத்தின் கைகளுக்குச் சென்றது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் மாற்றியமைக்கும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கான நடவடிக்கையில் ஏர் இந்தியா இறங்கியுள்ளது. விஸ்தாரா, ஏர் ஏசியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் ஏர் இந்தியாவுக்குப் பங்கு இருக்கும் நிலையில், அதை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

தொடரும் சர்ச்சை
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, விமானத்தில் நடக்கும் சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. ஏர் இந்தியா மட்டுமின்றி பல விமானங்களில் பயணிகள் மோசமாக நடந்து கொள்வதாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, பாரீஸில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் குடிபோதையில் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்திடம் நிறுவனம் தகவல் தெரிவிக்காததும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஏர் இந்தியா
இதற்கிடையே மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் நடத்தை சர்ச்சையாகியுள்ளது. லண்டனில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் பாத் ரூமில் புகை பிடித்துள்ளார். மேலும், சக பயணிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து 37 வயதான அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த ரமாகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது.

புகை பிடித்த பயணி
மேலும், லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த அந்த விமானத்தின் கதவையும் அந்த நபர் திறக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விமானப் பணியாளர் ஒருவர் கூறுகையில், "விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் அவர் டாய்டெல் சென்றதும் புகை பிடித்துள்ளார். இதனால் அலாரம் அடிக்கத் தொடங்கியது.. நாங்கள் அங்கே சென்ற போது, அவர் கையில் சிகரெட் இருந்தது. உடனே அதை வாங்கி விட்டோம். அப்போதே அவர் கத்த தொடங்கிவிட்டார்.

கை கால்களை கட்டிய குழு
பின்னர் அவரை எப்படியோ சமாதானம் செய்து.. அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் சிறிது நேரத்தில்... அவர் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றார். அவரது நடத்தையால் பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். நாங்கள் சொல்வதைக் கேட்கவும் தயாராக இல்லை.. தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். இதனால் வேறு வழியில்லாமல் அவரது கைகளையும் கால்களையும் கட்டி இருக்கையில் அமர வைத்தோம். எங்கள் பயணிகளில் ஒரு டாக்டர் இருந்தார்... அவர் வந்து சோதித்துப் பார்த்தார்.

டெஸ்ட்
அப்போது ரமாகாந்த் தனது மருந்துகள் பையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் அவரது பேக்கை எடுத்துப் பார்த்தோம்.. இருப்பினும், அதில் மாத்திரைகள் எதுவும் இல்லை.. மாறாக இ சிகரெட் மட்டுமே இருந்தது. அவரிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.. அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது டெஸ்ட் ரிசல்டில் தெரிந்து விடும்" என்றார். இந்தச் சம்பவம் குறித்து அந்த பயணி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications