ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் வாங்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா! இதை பண்ணுங்க போதும்
டெல்லி: தேவையான அனைத்தை ஆவணங்களையும் எடுத்துச் சென்றும் கூட வங்கி ஊழியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவ. 8ஆம் தேதி என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் நினைவில் இருக்கும். அன்றைய தினம் தான் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அன்றைய தினம் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இரவில் வந்த இந்த அறிவிப்பு நாட்டையே சற்று உலுக்கிவிட்டது.
பண மதிப்பு நீக்கம்: ஏனென்றால் அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் சுமார் 85% 500, 100 ரூபாய் நோட்டுகள் தான். புழக்கத்தில் இருந்த அத்தனை நோட்டுகளும் ஒரே நேரத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு தீரவே சில மாதங்கள் வரை ஆனது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாகப் புதிதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. பண மதிப்பிழப்பு நீக்கம் சமயத்தில் வங்கிகளில் கூட்டம் அலை மோதியதும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிக மோசமான துன்பத்தை எதிர்கொண்டதும் அனைவருக்கும் தெரியும். நிலைமை மெல்லச் சரியாகவே சுமார் 6 மாதங்கள் வரை ஆனது.
ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் அப்போது கணிசமாகப் புழக்கத்தில் இருந்தது. இருப்பினும், அப்போதே சில்லறை கிடைப்பதில்லை என்று மக்கள் முணுமுணுத்தனர். அப்போது திடீரென 2018இல் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. மேலும், ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைப்பதையும் நிறுத்தினர். இது குறித்து அப்போது சிலர் கேள்வி எழுப்பும் போது, தொழில்நுட்ப பிரச்சினையால் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்க முடியவில்லை என்றார்கள்.
அப்போதே விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவிக்க உள்ளதாகத் தகவல் பரவியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது மத்திய அரசு அதைத் திட்டவட்டமாக மறுத்திருந்தது. இதனிடையே சில மாதங்களிலேயே 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் வரை பொதுமக்கள் தங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகள்: செப். 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற போதிலும் அதை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 20000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் KYC நடைமுறையைப் பின்பற்றி ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரி, தேவையான அனைத்தையும் எடுத்துச் சென்றும் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு வரும்.
நீங்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றும் வங்கி ஊழியர் 2000 ரூபாய் நோட்டுகளைப் பெறவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் புகார்களைத் தெரிவிக்க, முதலில் சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு மாதத்திற்குள் வங்கி பதிலளிக்கத் தவறினால் அல்லது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தீர்வில் திருப்தி அடையவில்லை என்றால், ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம், 2021இன் கீழ் ரிசர்வ் வங்கியின் புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலில் (cms.rbi.org.in) புகாரைப் பதிவு செய்யலாம். இதன் மூலம் நாம் இதற்கான தீர்வை பெறலாம்.












Click it and Unblock the Notifications