கதிலகங்க வைக்கும் "கிரகன்" கொரோனா! வேக்சின் வேலை செய்யுமா? இந்தியாவிலும் நுழைந்தது
டெல்லி: கொரோனா பாதிப்பு திடீரென உலக நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ள கிரகன் கொரோனா இந்தியாவிலும் நுழைந்துள்ளது. அந்த வேரியண்ட் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது சீனாவில் உயரத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அச்சத்தைக் கிளப்பியுள்ளது. எங்கு உலகின் மற்ற நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. உலக நாடுகளும் கொரோனா சூழலை உற்று கவனித்து வருகின்றன.
சீனா மட்டுமின்றி உலகின் வேறு சில நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதலில் கண்டறியப்பட்ட கிரகன் வேரியண்ட் இப்போது அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வேரியண்டாக மாறியுள்ளது.
கொரோனா பிஎஃப் 7ஐ இம்போர்ட் செய்யும் இந்தியர்கள்! இத்தனை பேருக்கு பாதிப்பா? மீண்டும் கட்டுப்பாடுகள்?
கிரகன் வேரியண்ட்
இப்போது இந்த கிரகன் வேரியண்ட் உலகெங்கும் குறைந்தது 28 நாடுகளில் பரவியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதா? இது எளிதாகப் பரவுமா? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.. இந்த XBB.1.5 என்பது ஓமிக்ரான் XBB துணை வேரியண்ட்டின் புதிய திரிபாகும். இந்த XBB என்பது BA.2.75 மற்றும் BA.2.10.1 ஆகியவற்றின் கலவாயாகும். இந்த ஓமிக்ரான் XBB வேரியண்ட் ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அலைகளை ஏற்படுத்தியது.. கடந்த அக்டோபர் மாதமே உலக சுகாதார அமைப்பு இது குறித்து கவலை தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம்
டிசம்பரின் தொடக்கத்தில் இது அமெரிக்காவில் வெறும் 1% மட்டுமே இருந்தது. இருப்பினும், மெல்ல அதிகரித்து. கடந்த டிச. மாத இறுதியில் இது 41%ஆக உயர்ந்தது. இது இப்போது 71%ஆக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் திரிவுகளில் இதுதான் மின்னல் வேகத்தில் பரவுவதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார். உலகெங்கும் 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபு குறித்து உலக நாடுகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
டெஸ்டிங்கை குறைத்தால் இது வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளதால் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் மற்ற நாடுகளில் கிரகன் வேரியண்ட் குறைவாக இருந்தாலும் கூட, நிலைமை மின்னல் வேகத்தில் மாற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். வைரஸின் ஏற்பியை இது வலுவானதாக மாற்றுகிறது. இது வைரஸ் மனித செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது. அதேநேரம் இது முந்தைய வேரியண்ட்களை காட்டிலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆபத்து ஏன்
இருப்பினும், இது மனிதர்களின் தடுப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் அதிக ஆற்றலைப் பெற்றுள்ளது. அதாவது, வேக்சின் தடுப்பாற்றல் அல்லது முந்தைய பாதிப்பில் இருந்து கிடைத்த தடுப்பாற்றலில் இருந்து இது தப்பிக்கும். இதுவே ஆய்வாளர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. கொரோனா பரவ தொடங்கிய போது, ஆன்டிபாடி சிகிச்சைகள் நோயாளிகளுக்குத் தரப்பட்டது. ஆனால், இவை ஏற்கனவே முந்தைய வேரியண்ட்களில் பயனற்று போய்விட்டது. இந்த வேரியண்டிலும் கூட ஆன்டிபாடி சிகிச்சை பலன் தருவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரோனா வேக்சின்களுக்கு இது வேலை செய்யாமல் போக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எச்சரிக்கை
மேலும், இது வேகமாகப் பரவுவதால் அதிகப்படியான பேருக்குத் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பலருக்கும் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இந்த வேரியிண்ட் தான் இப்போது மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம் மற்ற நாடுகளில் இவை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெளிவாகத் தெரியவில்லை. கொரோனாவால் இப்போது கதிகலங்கிப் போய் இருக்கும் சீனாவில் இதுவரை இந்த வேரியண்ட் கண்டறியப்படவில்லை. அங்கு BA.5.2 மற்றும் BF.7 வேரியண்ட்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
இந்தியா
அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் இந்த வைரஸ் வேரியண்ட் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை ஐந்து பேருக்கு இந்த XBB.1.5 வேரியிண்ட் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள்ளேயே உள்ளது. ஏற்கனவே, சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தவுடன் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.