நிர்மலா ரிப்போர்ட்டில் ‘ரெட்’ மார்க்.. உற்று நோக்கும் பாஜக தலைமை.. “பேட்ச் வொர்க்” ஆரம்பிக்குதா?
டெல்லி: பாஜக - அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி மேலிடத்தில் 'ரிப்போர்ட்' சமர்ப்பித்துள்ள நிலையில், அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது பற்றி பாஜக வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தொடர் சீண்டல்களால், கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தது அதிமுக. கூட்டணி முறிவால் பாஜகவிற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால் அதிமுக தரப்பு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கறாராக கூறி வருகிறது.

மூன்றாவது அணி?: இதையடுத்து, பாஜக மூன்றாவது அணியை கட்டமைக்க வாய்ப்புள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் ஆகியோர் பாஜக அணியில் இணைய தயாராக இருப்பார்கள். அவர்களோடு, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியை பாஜக கட்டமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், ஒரு முக்கியமான ரிப்போர்ட்டை டெல்லி மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரிடமும் கருத்துகளை கேட்டு அதனை நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தயார் செய்துள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு, பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி விரிவான அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிர்மலா ரிப்போர்ட்டில் இருப்பது என்ன?: இந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக பாஜக வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இந்த கூட்டணி முறிவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதால் பாஜகவுக்கு பாதிப்பு தான் என நிர்மலா சீதாராமன் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியை தொடர்வதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும், அதிமுக தலைவர்களுடன் ஒரு கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும், தேர்தல் வரை அதிமுக தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட வேண்டும் என்றும், நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பேட்ச் வொர்க்: இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்கள், நிர்மலா சீதாராமன் அளித்த ரிப்போர்ட்டை முன்வைத்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தான் தமிழ்நாடு பாஜகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் இருக்கும் எனத் தெரிகிறது. பாஜக தேசிய தலைவர்களின் கருத்தை பெற்று, அதன்படி சென்னையில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications