இப்பவும் சொல்றேன்.. கேட்டுக்கோங்க.. 295 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும்: ராகுல் காந்தி சரவெடி
டெல்லி: எக்ஸிட் போல் முடிவுகள் லோக்சபா தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸின் ராகுல் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நேற்றைய தினம் கடைசிக் கட்ட தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
எக்ஸிட் போல்: இதற்கிடையே நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், நேற்று மாலை முதலே எக்ஸிட் போல் முடிவுகள் வெளி வரத் தொடங்கிவிட்டன. இதில் ஓரிரு எக்ஸிட் போல்களை தவிர பெரும்பாலான எக்ஸிட் போல்களில் பாஜக கூட்டணியை ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பல எக்ஸிட் போல் சர்வேக்கள் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறும் எனக் கூறியுள்ளது.
ஓரிரு எக்ஸிட் போல்கள் மட்டுமே தொங்கு நாடாளுமன்றம் அமையும் அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கிடையே இந்த எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தி சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி: இன்று லோக்சபா தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் அக்கட்சித் தலைமை ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த உடன் வெளியே வந்த ராகுல் காந்தியிடம் எக்ஸிட் போல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ராகுல் காந்தி, "இதற்குப் பெயர் எக்ஸிட் போல் இல்லை.. இது மோடி மீடியா போல்.. இது மோடிஜியின் சர்வே தான்.. இது கற்பனையான போல் முடிவுகள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
என்ன சொன்னார்: அப்போது செய்தியாளர் ஒருவர் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெல்லும் என கேள்வி எழுப்பினார். உடனே திரும்ப வந்த ராகுல் காந்தி, "சித்து மூஸ் வாலா பாடல் கேட்டு இருக்கிறீர்களா.. அதில் வருவது போல 295 இடங்களில் வெல்லும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
நம்பிக்கை: இந்த லோக்சபா தேர்தலை தேசியளவில் "இந்தியா" என்ற கூட்டணி அமைத்து காங்கிரஸ் எதிர்கொண்டது. நேற்றைய தினம் டெல்லியில் கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்தியா கூட்டணி நிச்சயம் 295 இடங்களில் வெல்லும் எனக் கூறியிருந்தார். இப்போது ராகுல் காந்தியும் அதே 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என கூறியிருக்கிறார்.
மேலும், நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடனேயே இருந்தனர். இந்த முறை பாஜகவை உறுதியாக வீழ்த்த முடியும் என்றே அவர்கள் கூறியிருந்தனர். அதே நம்பிக்கையுடன் தான் ராகுல் இன்று செய்தியாளர்களிடமும் பேசியுள்ளார். ஆனால், யார் வெல்லப் போகிறார்கள்.. மக்கள் யாருக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications