நாடே எதிர்பார்த்த அறிவிப்பு.. வருமான வரியில் வந்தது சின்ன மாற்றம்.. இதனால் யாருக்கு லாபம்!
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய விஷயங்களில் எதிர்பார்ப்பு நிலவினாலும், அனைவரும் மிகப் பெரியளவில் எதிர்நோக்கிக் காத்திருந்தது வருமான வரி தொடர்பான அறிவிப்பில் தான். இதில் புதிய வரி முறையில் இருப்போருக்கு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப். 1ம் தேதி எதிர்வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கலாகும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களும் தங்கள் பட்ஜெட்களை தாக்கல் செய்யும்.

இருப்பினும், இந்தாண்டு லோக்சபா தேர்தல் இருந்ததால் கடந்த பிப். 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இப்போது என்டிஏ கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், அவர் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது ஏழாவது முறையாகும். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
வருமான வரி: தொடர்ந்து வருமான வரி தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். வருமான வரி செலுத்துவோரில் 2இல் 2 பங்கு புதிய நடைமுறையைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், வருமான வரி முறையை மேலும் எளிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் வகையில் ஏஞ்சல் வரி முறை முழுமையாக நீக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோல தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அறிவிப்பு: புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கான வரி நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி இல்லை. ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ 7 லட்சம் பெறுவோருக்கு 5% வருமான வரி செலுத்த வேண்டும்.. ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ 10 லட்சம் பெறுவோருக்கு 10% வருமான வரியும், ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ 12 லட்சம் பெறுவோருக்கு 15% வரியும் செலுத்த வேண்டும்.
அதேபோல ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ 15 லட்சமாக இருந்தால் 20% வரி செலுத்த வேண்டும். ரூ. 15 லட்சத்திற்கு மேல் என்றால் 30% வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் சுமார் 4 கோடி சம்பளதாரர்கள் பலன் பெறுவார்கள் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

மாற்றம் என்ன: புதிய வருமான வரி முறையில் அடிப்படை உச்சவரம்பு மாற்றி அமைக்கப்படவில்லை என்ற போதிலும் அதற்கு அடுத்தடுத்த அடுக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதாவது முன்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் என்றால் 5% வருமான வரி செலுத்த வேண்டும். இப்போது இது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல முன்பு ரூ.9 லட்சம் வரை என்றால் 10% கட்ட வெண்டும் அதுவும் இப்போது ரூ 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு அடுக்குகளில் வரும் சம்பளதாரர்கள் பெரியளவில் பலன் பெறுவார்கள். இந்த மாற்றத்தால் புதிய வரி முறையை தேர்வு செய்வோர் ஆண்டுக்கு ரூ.17,500 வரை சேமிக்க முடியும். இது தவிர தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications