கலர் மாறிய வந்தே பாரத்! "காவி" நிறத்திற்கு உண்மையில் என்ன காரணம்? வெளிப்படையாக பேசிய அஷ்வினி வைஷ்ணவ்
டெல்லி: காவி நிற வந்தே பாரத் ரயில்கள் குறித்து இணையத்தில் பல வித கருத்துகளைக் கூறி வரும் நிலையில், இதற்கான உண்மை காரணம் என்ன என்பதை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கியுள்ளார்.
இந்தியன் ரயில்வே இப்போது பல்வேறு அதிநவீன வசதிகளைக் கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக அவர்கள் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு நாடு முழுக்க பெரிய வரவேற்பு கிடைத்தது.

வந்தே பாரத் ரயில்களில் முழுவதும் ஏசி, தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் டிராகிங் எனப் பல வசதிகள் இருக்கும். இதனால் வந்தே பாரத் ரயில்கள் உடனடியாக ஹிட் அடித்தது. நாடு முழுக்க மக்கள் ஆதரவு பெருமளவு அதிகரித்தது.
வந்தே பாரத்: நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வெள்ளை நிறத்திலேயே வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், சமீபத்தில் தான் வெள்ளையில் இருந்து அவை ஆரஞ்சு நிறத்திற்கு மாறியது. இது காவி நிறத்தில் இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இதற்கான காரணம் என்றும் பல தகவல்கள் இணையத்தில் உலா வந்ததது.
இதற்கிடையே ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் ஆரஞ்சு நிறத்தில் வந்தே பாரத் ரயில்களுக்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் விளக்கினார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் காவி நிறத்தில் இருப்பதாகச் சிலர் விமர்சித்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தந்துள்ள இந்த விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அஷ்வினி வைஷ்ணவ்: இது தொடர்பாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "வந்தே பாரத் ரயில்கள் நிறத்தை மாற்றியது தொடர்பாகப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு எந்தவொரு அரசியல் காரணமும் இல்லை. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வந்தே பாரத் ரயில்கள் நிறம் மாற்றப்பட்டதற்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கிறது. இதற்கும் அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
பொதுவாக மனித கண்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என இரண்டு நிறங்கள் தெளிவாகத் தெரியும். இதன் காரணமாகவே ஐரோப்பாவில் சுமார் 80 சதவீத ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் - ஆரஞ்சு கலவை நிறமாக இருக்கிறது. ரயில்களுக்கு சில்வர் போன்ற பல கலர்களும் உள்ளன. அவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போலப் பிரகாசமானவை தான். ஆனால் மனித கண்களுக்கு என வரும் போது... அவை பிரகாசமாகத் தெரியாது. இதன் காரணமாகவே மஞ்சள், ஆரஞ்சு சரியான நிறமாகக் கருதப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: மேலும், இதன் பின்னணியில் அரசியல் இல்லை என்றும், இது 100 சதவீத அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆரஞ்சு நிறம் பிரகாசமாகத் தெரியும் என்பதாலேயே விமானம் மற்றும் கப்பல்களில் இருக்கும் கருப்புப் பெட்டிகள் கூட ஆரஞ்சு நிறத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை பயன்படுத்தும் மீட்பு படகுகள் மற்றும் லைஃப் ஜாக்கெட்டுகள் கூட இதன் காரணமாகவே ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ரயில்வே தனது முதல் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலைக் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி கேரளாவின் காசர்கோடு மற்றும் திருவனந்தபுரம் இடையே அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் மொத்தம் 9 வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்த நிலையில், அதில் இந்த ஆரஞ்சு வந்தே பாரத்தும் ஒன்றாகும். காசர்கோடு-திருவனந்தபுரம் இடையேயான இந்த வந்தே பாரத் நாட்டின் 31ஆவது ரயிலாகும். இது பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகும்.












Click it and Unblock the Notifications