"மொபைலில் கிரிக்கெட்.." ஆந்திராவை அலறவிட்ட ரயில் விபத்து காரணம் இதுதான்.. அதிகாரப்பூர்வ தகவல்
டெல்லி: கடந்தாண்டு இறுதியில் ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்
இந்தியாவில் பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக ரயில்கள் இருக்கிறது. டிக்கெட் விலை குறைவு, பல வசதிகள் இருப்பதால் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் நடக்கும் ரயில் விபத்துகள் இந்தியாவில் ரயில்வேவுக்கு நல்ல இமேஜை தருவதாக இல்லை. குறிப்பாக ஒடிசாவில் நடந்த விபத்தில் பல நூறு பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா ரயில் விபத்து: அப்படி நடந்த முக்கியமான விபத்துகளில் ஒன்று தான் ஆந்திரா ரயில் விபத்து.. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் மோசமான ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது.
14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த இந்த ரயில் விபத்திற்கான காரணம் இப்போது ரெயி வந்துள்ளது. அதாவது விபத்தில் சிக்கிய இரண்டு பயணிகள் ரயில்களில் ஒன்றின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் தங்கள் மொபைலில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்படி அலட்சியமாகச் செயல்பட்டதே விபத்திற்குக் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: அன்றைய தினம் இரவு 7 மணியளவில் ஹவுரா-சென்னை ரூட்டில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் விபத்து நடந்தது. அப்போது ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயில் பின்னால் மோதியதில் 14 பேர் பலியாகினர். மேலும், 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தான் டிரைவர் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய ரயில்வே எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்துப் பேசும் போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர ரயில் விபத்து பற்றிக் குறிப்பிட்டார். அப்போது அவர் மேலும் பேசுகையில், "சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தைப் பொறுத்தவரை லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துள்ளனர். இது அவர்கள் கவனத்தைச் சிதறடித்த நிலையில் விபத்து நடந்துள்ளது.
ரயில்வே துறை: இப்போது நாங்கள் அத்தகைய கவனச்சிதறலைக் கண்டறியக்கூடிய அமைப்புகளை நிறுவி வருகிறோம், மேலும் லோகோ பைலட்கள் மற்றும் துணை பைலட்கள் கவனச்சிதறல்கள் இல்லாமல் ரயில்களை இயக்குவதையும் உறுதி செய்து வருகிறோம். நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். எந்தவொரு விபத்தாக இருந்தாலும் அதற்கா மூல காரணத்தைக் கண்டறிய முயல்கிறோம். அது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்." என்றார்.
ஆந்திர விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், அமைச்சர் இந்த கருத்தைக் கூறியுள்ளார். இந்த விபத்து நடந்த உடனேயே நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ராயகட பாசஞ்சர் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர்கள் தான் விபத்திற்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
அவர்கள் சிக்னல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டது. இப்போது நடத்தப்பட்ட முழுமையான விசாரணையில் அது உறுதியாகியே இருக்கிறது. இந்த இருவரும் அந்த ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications