குழந்தைகளுக்கு கேன்சர்! தெரிந்தும் அமைதியாக இருந்த ஜான்சன்! பேபி பவுடர் விற்பனை நிறுத்த காரணம் என்ன
டெல்லி: ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பேபி பவுடரை விற்பனை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவின் மிக முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்று ஜான்சன் அன்ட் ஜான்சன். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கூட இது சிங்கிள் டோஸ் வேக்சினை உருவாக்கி இருந்தது.
மற்ற நிறுவனங்கள் எல்லாம், இரண்டு டோஸ் வேக்சினை உருவாக்கி வந்த நிலையில், ஜான்சன் நிறுவனம் மட்டும் ஒற்றை டோஸ் வேக்சினை உருவாக்கி இருந்தது. இதற்கு நல்ல வரவேற்கும் கிடைத்தது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர்
இருப்பினும், நம்மில் பலருக்கும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தை மருந்து நிறுவனமாகத் தெரியாது. ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரே பல ஆண்டுகள் அதன் முகவரியாக இருந்து வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரை பயன்படுத்தாத தாய்மார்களே இல்லை என்ற சூழலே நிலவி வந்தது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இதே சூழல் தான்.

நிறுத்தம்
இந்தச் சூழலில் உலகெங்கும் அடுத்தாண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு முதல் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. அதாவது டால்கம் பவுடர்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பேபி பவுடர் விற்பனையை ஜான்சன் நிறுவனம் நிறுத்திக் கொள்ள உள்ளது. அதற்குப் பதிலாக சோள மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பேபி பவுடரில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

என்ன காரணம்
ஏற்கனவே உலகில் பெரும்பாலான நாடுகளில் ஜான்சன் நிறுவனத்தின் சோள மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பேபி பவுடர் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பேபி பவுடர் விற்பனையை ஜான்சன் நிறுவனம் நிறுத்தி இருந்த நிலையில், இப்போது உலகெங்கும் அதன் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

கேசன்ர்
பல ஆண்டுகளாக ஜான்சன் நிறுவனத்தின் அடையாளமாக இருந்த டால்கம் பேபி பவுடர் விற்பனை ஏன் நிறுத்தப்பட்டது என்பதைப் பார்க்கலாம். 2000களின் தொடக்கத்தில் இருந்தே ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடர் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்ற புகார் இருந்து வருகிறது. ஜான்சன் டால்கம் பேபி பவுடரில் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுத்தும் துகள்கள் இருப்பதாகவும் இதனால் பல குழந்தைகளுக்கு கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் உள்ளன.

வழக்குகள்
இது தொடர்பாக ஜான்சன் நிறுவனத்தின் மீது சுமார் 38,000 வழக்குகள் உள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜான்சன் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. முறையான அறிவியல் சோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்குப் பின்னரே டால்கம் பேபி பவுடரை விற்பனை செய்து வந்ததாக இத்தனை ஆண்டுகளாகக் கூறி வந்தது. இந்தச் சூழலில் திடீரென விற்பனையை நிறுத்தப் போவதாக ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகளுக்கு நஷ்ட ஈடுகளாக மட்டும் ஜான்சன் நிறுவனம் பல பில்லியன் டாலர்களை செலவழித்து உள்ளது.

சர்ச்சை நடவடிக்கை
குறிப்பாக ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக 22 பெண்கள் தொடர்ந்த வழக்கில் 2 பில்லியன் டாலர் நஷ்டஈடு தர நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி நஷ்டஈடு வழக்குகள் அதிகரித்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நஷ்டஈடு வழக்குகள் கவனிக்க என தனியாக எல்டிஎல் என்ற இணை நிறுவனத்தை ஜான்சன் உருவாக்கியது. அதன் பின்னர் சில நாட்களிலேயே எல்டிஎல் நிறுவனம் திவாலாகியதாக அறிவித்து நஷ்டஈடு வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தியது ஜான்சன்!

தெரிந்தே அமைதி
ஜான்சன் நிறுவனம் தங்கள் டால்கம் பவுடர் பாதுகாப்பானது எனக் கூறினாலும், பல ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் டால்கம் பவுடர்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருந்தது தெரிந்தும் ஜான்சன் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. 1971ஆம் ஆண்டு முதல் 2000களின் தொடக்கம் வரை பல சமயங்களில் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் கண்டறியப்பட்டதாகவும் இருப்பினும் ஜான்சன் நிறுவனம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications