"எனக்கு காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை.." திடீரென யூடர்ன் போட்ட சசி தரூர்.. பெரிய ட்விஸ்ட்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை.
இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர உள்ளனர். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ்
இதில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே ஆதரவாக உள்ளனர். ஏனென்றால் அவர் தான் நேரு குடும்பத்தினருக்கு நெருக்கமாக அறியப்படுகிறார். ஜி-23 தலைவர்களில் ஒருவரான சசி தரூருக்கு தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும் உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் கூட தனி ஆளாக நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சசி தரூர் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

சசி தரூர்
இந்தச் சூழலில் சசி தரூர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.. ஆனால் கட்சி வேலை செய்யும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். எனது இணைப் போட்டியாளர் மல்லிகார்ஜுன் கார்கே ஒரு அனுபவமிக்க தலைவர், அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், நிச்சயமாக அவருக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன்" என்று கூறியுள்ளார்.

யூ டர்ன்
சில நாட்களுக்கு முன்னர், சிலர் மிக எளிதாகத் தேர்தலில் வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்ற ரீதியில் சசி தரூர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் அவரே இப்போது மல்லிகார்ஜுன் கார்கே அனுபவமிக்க தலைவர் என்றும் அவரது தலைமையில் பணியாற்றுவேன் என்றும் கூறி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அசோக் கெலாட் விவகாரம்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் நபரைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யக் கூடாது என்று விதி இருக்கிறது. இருப்பினும், சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளிப்படையாகத் தான் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகக் கூறி இருந்தார். இதை விமர்சித்த சசி தரூர், காங்கிரஸ் தேர்தல் அலுவலரிடம் இது குறித்து புகாரும் அளித்து இருந்தார்

புகார்
சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான அசோக் கெலாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ராஜஸ்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இது காங்கிரஸ் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக உள்ளதாக சசி தரூர் விமர்சித்து உள்ளார்.

ராஜினாமா
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முதலில் அசோக் கெலட் தான் களமிறங்க இருந்தார். இருப்பினும், ஒருவருக்கு ஒரு பதவி விதி காரணமாக அசோக் கெலட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் எம்எல்ஏக்கள், ராஜினாமா என்று போர்க்கொடி தூக்கியதால் அசோக் கெலட் தலைவர் தேர்தலில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications