நட்டாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை.. வெளியே வந்தவுடன் நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க
டெல்லி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கு அவர் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு வெளியே வந்த நயினார் நாகேந்திரன், இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார். மேலும், அமித் ஷாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கும் அவர் முக்கிய பதிலைக் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் அரசியல் களம் இப்போது பயங்கரமாகச் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளிலும் ஏகப்பட்ட அரசியல் நகர்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் பல விஷயங்கள் மாறி வருகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வரிசையாக டெல்லிக்குச் சென்று முகாமிட்டு வருகிறார்கள்.

டெல்லி பயணம்
சமீபத்தில்தான் மாஜி மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியிருந்தார். இந்தச் சூழலில் தான் திடீரென நேற்று (திங்கள்) மாலை நயினார் நாகேந்திரன் டெல்லிக்குச் சென்றிருந்தார். தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், திடீரென மாலை 4 மணியளவில் அவர் டெல்லிக்குப் புறப்பட்டார்.
நயினார் நாகேந்திரன்
டெல்லி வந்திறங்கிய நயினார் நாகேந்திரன் நேராக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டிற்குச் சென்றார். அங்கு இருவரும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர். அவர் அமித் ஷாவை சந்திக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், நட்டாவுடன் இந்த ஆலோசனையை நடத்தினார். நட்டா உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு காரில் கிளம்பிய அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அவர் டெல்லி பயணம் தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அக்டோபர் 12ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு எனும் சுற்றுப் பயணத்தை நடத்தவுள்ளோம். மதுரையில் இருந்து இந்தச் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறோம். அதில் பாஜக தேசிய தலைவரான ஜே.பி. நட்டா கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு அழைப்பு கொடுக்கவே வந்தேன். அவரும் முடிந்தவரை வருகிறேன் என்றே உறுதியளித்துள்ளார்.
எதற்காக டெல்லி பயணம்?
ஜேபி நட்டா ஏற்கனவே வரும் அக்டோபர் 6ம் தேதி எம்ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தேதி கொடுத்துள்ளார். அதற்காக அவர் சென்னை வருவார். தொடர்ந்து புதுச்சேரியிலும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறார். இந்தச் சூழலில் தான் அக்டோபர் 12ம் மதுரை வருமாறு அழைப்பு விடுத்தேன். பாஜகவின் இந்த மக்கள் சந்திப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடமும் பேசியுள்ளேன். அவரும் அதிமுக தலைவர்களை அனுப்புவதாகக் கூறினார்" என்று தெரிவித்தார்.
அமித் ஷா
அடுத்து அமித் ஷாவை சந்திப்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், "இல்லை.. அமித் ஷாவை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாளை நான் மீண்டும் தமிழகம் செல்கிறேன்" என்று மட்டும் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் இப்போது என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜக மட்டுமே பிரதானக் கட்சிகளாக உள்ளன. கூட்டணியில் இருந்த அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு வெளியேறிவிட்டன. குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தாங்கள் கூட்டணியில் இருந்து விலக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனே காரணம் எனக் கூறியிருந்தார். இது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications