பாஜகவுக்கு ஹெல்ப்.. அமித்ஷாவை கவர ஈபிஎஸ் செய்த வேலை.. ‘அண்ணாமலை தேடிய ரிப்போர்ட்’ - ஃபைல் பின்னணி!?
டெல்லி : அமித்ஷாவை கவர்வதற்காகவே ஒரு ஸ்பெஷல் அரேஞ்மெண்ட்டோடு இந்த முறை டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி என்கிறது விவரமறிந்த டெல்லி வட்டாரம்.
ஏற்கனவே டெல்லி சென்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார்.
மீண்டும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவரைச் சந்திக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். அவரை விமான நிலையத்தில் சந்தித்தாலும் தனியாகப் பேச முடியவில்லை.
இந்நிலையில் தான் மீண்டும் பல்வேறு மூவ்களைச் செய்து டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து சில ஃபைல்களைக் கையில் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
2532.. 3 மூவ்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி.. முறியடிக்க ஓபிஎஸ்ஸின் அடுத்த பிளான் என்ன?
மிஷன் ஃபெயிலியர்
அதிமுகவில் வெடித்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. குடியரசுத் தலைவர் பிரியாவிடை நிகழ்வின்போது மோடி, அமித்ஷாவை தனியாகச் சந்தித்துப் பேச முயன்ற ஈபிஎஸ்ஸின் திட்டம் நிறைவேறவில்லை. பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணத்தின்போது, கவர்னர் மாளிகையில் அவரை சந்திக்க அனுமதி கோரியபோதும், பாஜக மேலிடம் நேரம் ஒதுக்கவில்லை.
டெல்லியில் சந்திக்கலாம்
சென்னை விமான நிலையத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது விரைவில் டெல்லியில் சந்திக்கலாம் என ஈபிஎஸ்ஸுக்கு டெல்லி தரப்பு உறுதி கொடுத்ததாகக் கூறப்பட்டது. எனினும், ஓ.பன்னீர்செல்வத்துடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியது ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்தது. அதிமுக விவகாரத்தில் டெல்லி தலைமை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பதாக ஒரு தோற்றத்தைக் கொடுத்தது.
ரிப்போர்ட்
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதாக தமிழகத்திலிருந்து டெல்லிக்கு ரிப்போர்ட் சென்றும் கூட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு டெல்லி பிடி கொடுக்கவில்லை. பாஜக மேலிடத்தின் திட்டம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, ஈபிஎஸ் நால்வரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை ஈபிஎஸ் ஏற்றுக்கொள்ளாததால் பாஜக தலைமை ஈபிஎஸ் மீது அதிருப்தியிலும் இருந்தது.
இத்தனை நாளும் இல்லாமல்
இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பினரும், ஈபிஎஸ் தரப்பினரும் டெல்லியில் உள்ள முக்கிய புள்ளிகளிடம் தொடர்ந்து பேசி, காய்களை நகர்த்தி வந்தனர். இந்நிலையில் தான் அமித்ஷா அலுவலகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கி அழைப்பு வந்தது. இத்தனை வாரங்களாக தொடர் முயற்சிகள் எடுத்தும் இப்போது முயற்சி பலித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
எடப்பாடி புலம்பல்
பாஜக மேலிடத்திற்கு நெருக்கமான புள்ளியிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி, தலைமை தன்னை கண்டும் காணாமல் இருப்பது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவு வந்ததையும், கட்சியில் இருக்கும் ஆதரவையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். இதையடுத்து, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷாவை அப்ரோச் செய்யும்போது அவர்கள் எதிர்பார்க்கும் ரிப்போர்ட்டோடு செல்லுங்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அமித்ஷாவை கவர்ந்த ஈபிஎஸ்
அதன் அடிப்படையிலேயே முக்கியமான ஃபைல்களை தயார் செய்துகொண்டு மீண்டும் அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் நேரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டு, டெல்லிக்கு தனது சகாக்களோடு சென்று முக்கியமான அந்த ஃபைல்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுத்து அவரைக் கவர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தலைமையின் கண் தன் பக்கம் திரும்பும் என்றும் கணக்குப் போட்டுள்ளார்.
ஃபைலில் இருந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் கொடுத்த ஃபைலில், முதல்வர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், திமுக அமைச்சர்கள் பலர் பற்றிய புகார்கள் சில ஆதாரங்களுடன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவ்வப்போது முதல்வர் பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் ஊழல் புகார்களை முன்வைத்த நிலையில், அதற்கான ஆதாரங்களை அமைச்சர்கள் கேட்டபோது எதையும் அவரால் வெளியிட முடியவில்லை. அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர்.
பாஜகவுக்கு உதவி
இதனால், டெல்லி தலைமையும் அண்ணாமலையிடம், திமுக அமைச்சர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்குமாறு அட்வைஸ் கொடுத்தது. இந்நிலையில் தான், தனக்கு அரசு நிர்வாகத்தில் இருக்கும் தொடர்புகளைப் பயன்படுத்தி சில முக்கியமான தகவல்களைத் திரட்டிச் சென்று டெல்லியில் சேர்த்திருக்கிறார் ஈபிஎஸ். இதன்மூலம், பாஜக, திமுகவுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஈபிஎஸ் உதவியிருக்கிறார் என்கிறார்கள்.
அமித்ஷா ஓகே
எடப்பாடி பழனிசாமி ஃபைலை கொடுத்து சொன்ன விஷயங்கள் அமித்ஷாவுக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறதாம். முக்கிய அதிகாரிகளின் வாயிலாகவே இந்த தகவல்களை திரட்டியதாகவும், இதன் அடிப்படையில் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நம் கூட்டணிக்கு சாதகமான சூழல் அமையும் என்றும் போட்டு வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால், அமித்ஷாவும் உற்சாகமாகியுள்ளார், விரைவில் ஈபிஎஸ் எதிர்பார்க்கும் ஆக்ஷன்கள் தொடங்கலாம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.