அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்பட்டு.. மீண்டும் மசூதி கட்டப்படும்! இமாம் சங்க தலைவர் சர்ச்சை
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இப்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவரான மௌலானா சாஜித் ரஷிதி, அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்படும் எனக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992இல் இடிக்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகப் பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது.
அதில் கடைசியாக அயோத்தி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக அயோத்தி நகரில் வேறு பகுதியில் மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ராமர் கோயில் கட்டுமானம் வேகமெடுத்தது.

அயோத்தி
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்ட 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் 5-0 என ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்காகச் சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்றாக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. "இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை மறுக்க முடியாது" என்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறியது.

கட்டுமான பணிகள்
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கடந்த ஆகஸ்ட் 5, 2020இல் அயோத்தியில் 'ஸ்ரீ ராம் ஜென்ம பூமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். இப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்திருந்தார். நாடு முழுக்க நிதி திரட்டி ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

சர்ச்சை கருத்து
2023 இறுதியில் அல்லது 2024 தொடக்கத்தில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகியும் அம்மாநில அதிகாரிகளும் கட்டுமான பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ராமர் கோயில் குறித்து மௌலானா சாஜித் ரஷிதி என்பவர் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இடிக்கப்படும்
பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவரான மௌலானா சாஜித் ரஷிதி, "50-100 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த தலைமுறை முஸ்லிம் மக்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தும்.. அதே இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்தும் தெரிந்து கொள்வார்கள். அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் நீதிபதியோ அல்லது ஒரு முஸ்லிம் அரசியல்வாதியோ ஆட்சிக்கு வந்தால், அவர் ராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்ட மாட்டாரா.. நிச்சயம் கட்டுவார்" என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

அரசியலமைப்பிற்கு எதிரானது
மேலும், அயோத்தியில் ராமர் கோவிலுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியது இந்திய அரசியலமைப்பை மீறி ஒரு செயல் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது இந்திய அரசியல் சாசன சட்டப்படி பிரதமர் பதவியில் இருப்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் இருப்பினும் இதை மீறும் வகையில் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியுள்ளார் என்றும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications