"ஒரே நாடு ஒரே வரி.." அரசியல் செய்வது ஈஸி, ஆனா.. டெல்லியில் நின்றபடி அமைச்சர் பிடிஆர் பரபர
ஒரே நாடு ஒரே வரி குறித்து நிதியமைச்சர் பிடிஆர் முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
டெல்லி: டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே வரி போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம் என்றும் அதை நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அதன்படி தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, ஜிஎஸ்டி தீர்ப்பாயம் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் பிடிஆர்
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது. இதில் தணிக்கை அறிக்கை வரவில்லை என்பதால் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பதில் தாமதம் இருந்தது.

நிலுவைத் தொகை
அப்போது அந்த தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் தொகையை விடுவித்துள்ளனர். 2020-21 நிதியாண்டிற்குத் தணிக்கை அறிக்கையைத் தொடர்ந்து சுமார் 4230 கோடி ரூபாயை விடுவித்துள்ளனர். இன்னும் 2021-22, 2022-23இல் மூன்று மாதங்களுக்கு நிலுவையில் உள்ளது. இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் குறித்தும் விவாதித்தோம்.

மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
இது மத்திய அளவில் மட்டுமே இருக்க வேண்டுமா.. அல்லது மாநில அளவிலும் இருக்க வேண்டுமா.. அதில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் விரிவான விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். மாநிலங்களிலேயே மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்க 13 மாநிலங்கள் வலியுறுத்தினோம். மாநில உரிமைகளைப் பாதுகாக்க உறுப்பினர்கள் நியமனத்தில் அதிக அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

நேர விரயம் தடுக்கப்படும்
இந்த விவகாரத்தில் சுமார் 4-5 மணி நேரம் விவாதித்தோம். வரும் நாட்களில் இதில் மேலும் சில நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது வரை வரி யாருக்காவது தவறாக விதிக்கப்பட்டால் அவர்கள் நேரடியாக உயர் நீதிமன்றத்திற்கே செல்ல வேண்டி உள்ளது. அதை மாற்றி இந்த தீர்ப்பாயம் வழியாகச் செல்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் நேர விரயம் தடுக்கப்படும். இன்னுமே கூட இதில் சில மாற்றங்கள் தேவை.

ஒரே நாடு ஒரே வரி
ஒரே நாடு ஒரே வரி போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால், அதைச் செயல்படுத்துவது கடினம்; அதில் நிறையச் சிக்கல் உள்ளன ஹரியானா துணை முதல்வர் ஒரே நாடு ஒரே வரி ஒரே தீர்ப்பாயம் வேண்டும் என்றார். ஆனால், இது மிகக் கடினம். அப்படியிருக்கும் பொது ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் ஏன் இத்தனை நீதிமன்றங்கள் உள்ளன என்று நான் கேட்டேன்" என்று அவர் தெரிவித்தார்,












Click it and Unblock the Notifications