"பாரதியார் பெயரில்.. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.." காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இன்று தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொங்கி வைத்தார். அதில் பிரதமர் மோடி காசிக்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.
நமது நாட்டின் மிகவும் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி.. வரலாற்று ரீதியாகவும் காசிக்கு முக்கிய இடம் உள்ளது.
இந்த காசி நகருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல காலத்திற்கு முன்பாகவே இருக்கும் தொடர்பை மீண்டும் கண்டறிந்து, கொண்டாடும் வகையில் காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
இந்த காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று. நவ 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்கு இது நடைபெற உள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா எம்பியும் கலந்து கொண்டார். பிரதமர் மோடி முன்னிலையில் இளையராஜா இசைக் கச்சேரியும் நடைபெற்றது. இந்த சங்கமத்தில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டில் இருந்து பலரும் சிறப்பு ரயில் மூலம் காசி சென்றுள்ளனர்.

"வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு"
இந்த காசி தமிழ் சங்க நிகழ்ச்சியால் காசி நகரமே களைகட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு" என்று கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.. காசியும் தமிழ்நாடும் தனது கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது.. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி.. சமஸ்கிருதம், தமிழ் என இரு மொழிகளுமே சிறந்து விளங்குகிறது..

புனிதமானது
நம் நாட்டில் நதிகளின் சங்கமம் தொடங்கி அறிவு மற்றும் எண்ணங்களின் சங்கம் வரை அனைத்து சங்கமங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களின் கொண்டாட்டம் தான் இந்த சங்கமம் காசி மற்றும் தமிழ்நாடு சங்கமிக்கும் இந்த இடம் கங்கை மற்றும் யமுனை சங்கமம் போல் புனிதமானது. காசி இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார தலைநகரமாக இருந்தாலும், இந்தியாவின் பழமையான வரலாற்றைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.

காசிக்கு துளசிதாசர், தமிழ்நாட்டிற்குத் திருவள்ளுவர்
இந்தியா கடந்த 1000 ஆண்டுகளாகக் கலாச்சார ஒற்றுமையைப் பின்பற்றும் ஒரு நாடாகவே இருந்து உள்ளது. காசி, தமிழ்நாடு இரண்டுமே சிவமயமானது, சக்தி வாய்ந்தது.. இரண்டு ஊர்களும் திருக்கோயில்களுக்குப் பிரபலமானது.. காசியைப் போலவே தமிழ்நாடும் பழமையானது, சிறப்பான கலாசாரம் கொண்டது.. காசிக்கு துளசிதாசர், தமிழ்நாட்டிற்குத் திருவள்ளுவர் பெருமை சேர்த்துள்ளனர். தமிழகத்தில் திருமண முறையிலேயே காசி யாத்திரை செல்வதாக ஒரு நிகழ்ச்சி உள்ளது.

நீண்ட நெடிய பந்தம்
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நீண்ட நெடிய பந்தம் இருக்கிறது.. காசியின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு பல உள்ளது.. தமிழ்நாட்டின் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு அதன் துணைவேந்தராக மகத்தான பங்களிப்பை வழங்கினார். இப்படி பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ் கோயில்களும் உள்ளன.. சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்து உள்ளார்..

பழமையான மொழி
காசி மற்றும் தமிழ்நாடு இரண்டும் இசை, இலக்கியம் மற்றும் கலையில் சிறந்து விளங்குகிறது. காசியின் தபேலாவும் தமிழ்நாட்டின் மத்தளமும் புகழ்பெற்றவை. காசியில், நீங்கள் பனாரசி புடவையைப் பெறுவீர்கள்.. அதேபோல தமிழ்நாட்டில் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டுகளைப் பார்க்க முடியும் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் தாயகம் இந்தியா. இதைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.. தமிழை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும்.

தனி இருக்கை
உலகின் மிகப் பழமையான இந்த மொழியைப் பற்றி நாம் உலகுக்குச் சொல்லும்போது முழு நாடும் பெருமை கொள்கிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் தமிழ் இருக்கை அமைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் தொடங்கப்படும்" என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் தமிழ் இருக்கை என்பது ஏற்கனவே மோடி கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்த ஒன்றாகும். அது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அதைத் தான் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications