"காங்கிரஸுக்கு இந்த தேர்தல் தோல்வி தான்! ராகுல் செல்வாக்கும் அதிகரிக்கவில்லை!" பிரசாந்த் கிஷோர் பரபர
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 சீட்களில் வென்றது ராகுல் காந்தி செல்வாக்கை அதிகரித்துள்ளதையே காட்டுவதாகப் பலரும் கூறும் நிலையில், அதற்கு நேர்மாறான கருத்தைத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. பாஜக 300+ சீட்களில் வெல்லும் என்றே பெரும்பாலான எக்ஸிட் போல்கள் கூறியிருந்த போதிலும் பாஜகவால் தனிப்பெரும்பான்மையைக் கூடப் பெற முடியவில்லை.

பாஜக 240 சீட்களில் வென்ற நிலையில், என்டிஏ கூட்டணி ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றுள்ளது. கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இந்தளவு சீட்களை வென்றது இதுவே முதல்முறையாகும்.
பிரசாந்த் கிஷோர்: இதற்கிடையே லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்துள்ளார். பிரசாந்த் கிஷோரும் பாஜக 300 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கூறியிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருந்த அவர் முதல்முறையாக வாய் திறந்துள்ளார்.
ராகுல் செல்வாக்கு: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றுள்ள போதிலும், இதை வைத்து ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் 99 இடங்களில் வென்று இருக்கிறது.. இது ராகுல் காந்தி மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம்.. ஆனால், அவரது தொண்டர்களிடையே மட்டுமே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
காங்கிரஸ் 99 சீட்களில் வென்றுள்ள நிலையில், ராகுல் காந்தி செல்வாக்கு கூடிவிட்டதாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில் இல்லை.. இந்த வெற்றி அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டுமே ராகுல் காந்தியின் இமேஜை உயர்த்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி வெற்றியைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது" என்றார்.
உதாரணத்திற்குச் சொல்கிறேன்.. உங்கள் மகன் பெயில் ஆக ஆகப் போகிறான் என நினைக்கும் போது அவன் 60 மார்க் பெற்றால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஆனால், 90 மார்க் எடுக்கும் உங்கள் மகன் 70 மார்க் எடுத்தால் உங்களுக்கு அதிருப்தியே ஏற்படும்" என்று அவர் தெரிவித்தார்.
மோசமான தேர்தல்: உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ள நிலையில், அது குறித்துக் கேட்ட போது, இது காங்கிரஸ் வரலாற்றில் மூன்றாவது மோசமான தேர்தல் என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "1977இல் இந்திரா காந்தி ஆட்சியை இழந்தபோது கூட காங்கிரஸ் 154 இடங்களில் வென்றது.. எனவே 99 சீட்களில் வென்றது காங்கிரஸ் மறுமலர்ச்சியைக் காட்டுகிறது எனச் சொல்ல முடியாது.. அவர்களுக்கு ஒரு சான்ஸ் இங்கு இன்னும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.
20% தப்பாகிப் போனது: தொடர்ந்து தேர்தல் முடிவுகளைத் தவறாகக் கணித்தது குறித்துப் பேசிய அவர், "ஆமா எனது கணிப்பு தப்பாகிப் போனது உண்மை தான்.. சுமார் 20% வரை எனது கணிப்பு தப்பாகிப் போய் இருக்கிறது. நான் 300 இடங்களில் பாஜக வெல்லும் எனக் கணித்திருந்தேன். ஆனால், 240இல் மட்டுமே பாஜக வென்றது. 20% குறைவாகவே பாஜக வென்றுள்ளது.
அதேநேரம் மோடி மீது நாட்டில் கோபம் இல்லை என்று நான் கூறியிருந்தேன். தேர்தல் முடிவுகளும் அதையே தான் காட்டுகிறது. ஓரிரு இடங்களில் மோடி அரசு மீது அதிருப்தி இருக்கிறது.. ஆனால், நாடு முழுக்க பரவலாகக் கோபம் என்ற சூழல் எல்லாம் இல்லை. இதன் காரணமாகவே அவர்களால் ஆட்சியைத் தக்க வைக்க முடிந்தது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications