நிம்மதி தந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! டக்குனு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி! என்ன சொன்னார்
டெல்லி: கிரிமினல் அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக ராகுல் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தல் சமயத்தில் பேசிய பேச்சு சர்ச்சையானது. அதாவது மோடி எனப் பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே போல இருப்பதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சித்தார்.
வழக்கு: இந்த வழக்கில் ராகுல் காந்தியைக் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பால் தனது எம்பி பதவியை ராகுல் காந்தி இழந்த நிலையில், அவரால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில், முதலில் குஜராத் ஐகோர்ட் இதை டிஸ்மிஸ் செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி மிக பாசிட்டிவான ஒரு தீர்ப்பைக் கொடுத்தது. அதாவது, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் தனது எம்பி பதவியைப் பெறுகிறார்.
ராகுல் காந்தி: இது தொடர்பான உத்தரவு வந்தவுடன் அவர் முதலில் ட்வீட் செய்திருந்தார். அதாவது, "என்ன நடந்தாலும், எனது கடமை அப்படியே இருக்கும்.. இந்தியா என்ற கட்டமைப்பைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "ஜனநாயகம் வென்றுள்ளது.. ராகுல் காந்தி உண்மைக்காகப் போராடினார்... மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,000 கிமீ நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார். பொதுமக்கள் அளித்த ஆசீர்வாதம் தான் எங்களுக்கு இந்த தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்யும் போது அவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். வெறும் 24 மணி நேரத்தில் அவர்கள் தகுதி நீக்கம் எல்லாம் செய்தனர். இப்போது பார்க்கலாம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று.. உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இப்போது அவரை மீண்டும் பதவியில் அமர்த்த எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
ராகுல் பேச்சு: தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி தனது பேச்சை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உண்மை வெல்லும் என்பதையே இது காட்டியுள்ளது. "எனது பாதை தெளிவாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்குத் தெளிவு உள்ளது. எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் அளித்த ஆதரவுக்கு நன்றி" என்று முடித்துக் கொண்டார்












Click it and Unblock the Notifications