"2,000 சதுர கிமீ.." சீனா ரொம்ப டேஞ்சர்.. எல்லையில் என்ன நடக்குது தெரியுமா.. சரமாரியாக விளாசிய ராகுல்
சீன விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும் நிலையில், எல்லை விவகாரத்தில் இந்தியோ மிகவும் ஆபத்தான போக்கைக் கையாண்டு வருவதாக ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி நாடு முழு பாத யாத்திரை சென்றிருந்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த ஒற்றுமை பாத யாத்திரை இன்று காஷ்மீரில் நிறைவடைகிறது. காங்கிரஸ் நடத்திய மிகப் பெரிய பாத யாத்திரையாக இது உள்ளது.
ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரைக்கு நாடு முழுக்க மக்கள் மிகப் பெரிய வரவேற்பு கொடுத்ததாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்த யாத்திரை இன்று மிகப் பெரிய கூட்டத்துடன் நிறைவடைகிறது.
பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு! ஹை அலர்ட்டில் காஷ்மீர்
சீன விவகாரம்
இதனிடையே பேரணிக்கு நடுவிலும் மத்திய அரசை பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இப்போது சீன விவகாரத்திலும் அவர் மத்திய அரசைச் சாடியுள்ளார். சீனாவின் நடவடிக்கைக் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்த அவர், லடாக்கில் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியைச் சீன ஆக்கிரமித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சீனா நமது நிலத்தைக் கைப்பற்றியதை இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் மூலம் அவர்கள் பின்பற்றும் அணுகுமுறை மிகவும் ஆபத்தான முறையில் இருக்கிறது. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
ஒரே வழி
மத்திய அரசின் செயல்பாடு மேலும் ஆக்ரோஷமான விஷயங்களைச் செய்ய அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சீனாவை உறுதியாகக் கையாள்வதே அவர்களைச் சமாளிக்கும் ஒரே வழியாகும். நமது நிலத்தை அவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால். இதை மறுக்கும் மத்திய அரசு சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறது.
2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலம்
நான் சமீபத்தில் லடாக்கிலிருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு தூதுக்குழுவைக் கூட சந்தித்துப் பேசினேன்.. அவர்கள் சொன்னது ஒன்று தான்.. சீனா சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பைக் கையகப்படுத்தியுள்ளனர் என்றே அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல ரோந்துப் பகுதிகளும் கூட இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் போய்விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
சீனாவின் நிலைப்பாடு
முன்னதாக கமல்ஹாசன் உடனான உரையாடலிலும் அவர் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியிருந்தார். அதில் அவர், " எங்களுடன் மோதல் போக்கைக் கையாளாதீர்கள். அப்படிக் கையாண்டால் நாங்கள் உங்கள் எல்லையை மாற்றுவோம் என்பதையே சீனா சொல்ல வருகிறது. நாங்கள் லடாக்கிற்குள் நுழைவோம், அருணாச்சலத்தில் நுழைவோம். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள் என்றே அவர்கள் சொல்ல வருகிறார்கள். இல்லையென்றால் மோசமான பாதிப்புகள் ஏற்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
ரோந்து பகுதிகள்
லடாக்கில் உள்ள 65 ரோந்து பகுதிகளில் 26 இடங்களில் இந்தியா தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "சிலர் திட்டமிட்டே பொய்யான கருத்துகளைப் பரப்புகிறார்கள். இது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் நடந்தது. 1962 இல் ஆக்கிரமிக்கப்பட்டது.. ஆனால், இது ஏதோ இப்போது நடந்ததை போலச் சொல்கிறார்கள்" என்று அவர் பதிலடி கொடுத்தார்.
இந்தியா சீனா
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே எல்லையில் நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்குப் பிறகு எல்லையில் அமைதியற்ற ஒரு சூழல் ஒருவானது. இதனால் இரு தரப்பும் எல்லையில் தொடர்ச்சியாக ராணுவத்தைக் குவித்தனர். அங்கு அமைதியற்ற சூழல் உருவான நிலையில், இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னரே நிலைமை ராணுவம் மெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டது.