எப்போ கல்யாணம்.. வந்து விழுந்த கேள்வி.. பொறுமையா யோசித்து ராகுல் காந்தி சொன்ன கலகல பதில்! டிரெண்டிங்
டெல்லி: மாணவர்களுடன் நடந்த உரையாடல் ஒன்றில் ராகுல் காந்தியின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியைக் கேட்டவுடன் இரண்டு நொடி யோசித்த ராகுல் காந்தி, அதற்குச் சுருக்கமாகப் பதிலை அளித்தார். திருமணம் குறித்த கேள்விக்கு அவர் தந்த இந்த பதில் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்திக்கு இப்போது வயது 54. அவர் இப்போது எங்குச் சென்றாலும் அவரிடம் இப்போது கேட்கப்படும் முக்கிய கேள்விகளில் ஒன்று எப்போது திருமணம் என்பது தான்.

ராகுல் காந்தி: தமிழ்நாடு தொடங்கிப் பல இடங்களில் அவரிடம் பலர் பல விதங்களில் கேட்டு வருகிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு பதிலை அளித்துள்ளார். "சரியான பெண்ணை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்வேன்.." "நான் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறேன்.." "கட்சி வேலை அதிகமாக இருக்கிறது" என்று ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு பதிலை அளித்து வந்துள்ளார்.
இதற்கிடையே இப்போது ஸ்ரீநகரில் மாணவிகள் ராகுல் காந்தியிடம் அதே கேள்வியைத் தான் இப்போது கேட்டுள்ளனர். காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குள்ள மாணவர்களுடன் காங்கிரஸின் ராகுல் காந்தி உரையாடினார். அதில் அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாற்றினர். அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
திருமணம்: திருமணம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு மாணவி ஒருவர் கேட்ட போது, "20-30 ஆண்டுகளாக இந்த (திருமணம்) அழுத்தத்தைத் தவிர்த்துவிட்டேன். ஆனால் திருமணம் என்பது நல்ல விஷயம் தான்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மற்றொரு மாணவி, "நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்கள் தானே" என்று கேட்டார். அதற்கு ராகுல் காந்தி. "ஆமாம்.. அதாவது நான் திருமணத்தை சீரியஸாக திட்டமிடவில்லை. ஆனால் அது நடந்தால் ஓகே தான்.." என்றார். அப்போது மாணவிகள் உங்கள் திருமணத்திற்கு எங்களையும் கூப்பிடுங்கள் என்றனர். நிச்சயம் கூப்பிடுவேன் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.
பிரியங்கா காந்தி: முன்னதாக ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் லோக்சபா தேர்தலுக்கு முன்பு ரேபரேலி தொகுதியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர், "எப்போது திருமணம்" என்று கேட்டுள்ளார். உடனே பிரியங்கா காந்தி, "இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லவும்" என்று கூறி மைக்கை ராகுல் காந்தியிடம் கொடுத்தார். அப்போது விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
லாலு பிரசாத் யாதவ்: அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் போது லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். லாலு பிரசாத் யாதவ், "சீக்கிரம் திருமணம் செய்துகொள்.. உனது திருமணத்தில் கலந்து கொள்ள எங்கள் அனைவருக்கும் ஆசை இருக்கிறது" என்று கூறினார். அதற்கு ராகுல் காந்தி, "நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications