நீங்க முஸ்லிம் தானே! தசரா வாழ்த்து கூறி ட்ரோலுக்கு ஆளான முகமது ஷமி.. அடித்து விளாசிய அனுராக் தாகூர்
டெல்லி: தசரா பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்து நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தசரா கொண்டாடப்பட்டது. தென்இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடக மாநிலம் மைசூர் தசரா, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசை தசரா விழா பிரசித்தி பெற்றது. மாறாக வடஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
ராவணனை அழித்து சீதையை ராமன் மீட்டதை நினைவுப்படுத்தி வடஇந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரித்து கொண்டாடுவார்கள். இதன்மூலம் தீமை விலகி நன்மை கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தசரா விழாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தசரா வாழ்த்து தெரிவித்த முகமது ஷமி
அதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ராமன் படத்தை வெளியிட்டு, ‛‛மகிழ்ச்சியான தசரா தினத்தில் ராமர் உங்கள் வாழ்க்கை நிறைய மகிழ்ச்சி, வெற்றியை வழங்க பிரார்த்திக்கிறேன்.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தசரா வாழ்த்துக்கள்'' என வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

ட்ரோல் செய்யப்பட்ட முகமது ஷமி
முகமது ஷமியின் இந்த வாழ்த்துக்கு ஏராளாமனவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மதங்களை கடந்து அவர் வாழ்த்தியது வரவேற்புக்குரியது. மதங்களை கடந்து இந்தியர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்த முகமது ஷமிக்கும் தசரா வாழ்த்துக்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் சிலர் அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர். நீங்கள் தசரா வாழ்த்து தெரிவித்தால் இந்திய அணியில் இடம் கிடைக்காது என சிலர் கூறினர்.

விசுவாசத்தை நிரூபிக்க..
மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு முறையும் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது எனவும், எத்தனை கிரிக்கெட் வீரர்கள் ஈத் வாழ்த்து சொன்னா்கள் எனவும் கேள்விகள் எழுந்தன என பாகிஸ்தான் கொடியை பெயரில் வைத்துள்ள நபர் கூறினார். மேலும் சிலர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலைக்கு முகமது ஷமி தள்ளப்பட்டுள்ளார் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினர்.

மத்திய அமைச்சர் ஆதரவு
இந்நிலையில் தான் முகமது ஷமியின் தசரா வாழ்த்து குறித்து மத்திய இளைஞர் நலன் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்தார். அதன்மூலம் முகமது ஷமிக்கு ஆதரவாக அனுராக் தாகூர் கூறியதாவது: ‛‛தசரா என்பது அனைவரும் கொண்டாடும் பண்டிகை. இந்திய கிரிக்கெட் வீரர்களும் கொண்டாடுகிறார்கள். முகமது ஷமியும் கொண்டாடினால் என்ன பிரச்சினை?. இதை எதிர்ப்பவர்கள், நாட்டை பிரிக்க நினைப்பவர்கள். ஒரு தேசமாக அனைவரையும் ஒன்றாக வைத்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுங்கள்'' என்றார்.

முதல் முறையல்ல
முகமது ஷமி ட்ரோலுக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தபோது முகமது ஷமியை குறிவைத்து ட்ரோல் செய்யப்பட்டார். அப்போது இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது தசரா வாழ்த்து தெரிவித்து விவாதத்துக்கு உள்ளான முகமது ஷமிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆதரவு தெரிவித்து நெட்டிசன்களை விளாசியுள்ளார்.

பும்ராவுக்கு பதில் ஷமி?
இந்திய வேகப்பந்து வீச்சாளராக உள்ள முகமது ஷமி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வான ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதில் முகமது ஷமி அணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications