பெரிய திருப்பம்! காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்கும் சசி தரூர்? அவரே சொன்ன பதிலை பாருங்க
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக அவரே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கும் மாநிலங்களில் கூட ஆட்சியைப் பிடிக்க முடிவதில்லை.
இதனால் டெல்லி தலைமை மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கட்சியில் இருந்து விலகும் பலரும் ராகுல் காந்தியையே குற்றஞ்சாட்டுகின்றனர்.

காங்கிரஸ்
2019 மக்களவை தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூடப் பெற முடியவில்லை. தோல்விக்குப் பொறுப்பு ஏற்றுக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே சோனியா காந்தி இடைக்கால தலைவராகவே செயல்பட்டு வருகிறார்.

தலைவர் தேர்தல்
காங்கிரஸ் கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தும் கூட இதே குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். இந்தச் சூழலில் டெல்லியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் அக்டோபர் 17இல் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.

போட்டி
இதில் சோனியா காந்திக்கு நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அசோக் கெலாட்டை எதிர்த்து மற்றொரு மூத்த தலைவர் சசி தரூர் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமான முறையிலும் நடைபெற வேண்டும் எனச் சமீபத்தில் எழுதிய கட்டுரையிலும் சசி தரூர் குறிப்பிட்டு இருந்தார்.

சசி தரூர் பதில்
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், "இது தொடர்பாக நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் அந்த கட்டுரையில் எனது கருத்தைக் கூறி உள்ளேன். தலைவரைத் தேர்வு செய்ய நடத்தப்படும் இந்தத் தேர்தல் நிச்சயம் காங்கிரசுக்கு நன்மையையே கொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

விரைவில் இறுதி முடிவு
திருவனந்தபுரம் எம்.பி.யான சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் இருப்பினும், இந்த விவகாரத்தில் அவர் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் இறுதி முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அது காங்கிரசுக்குப் பெரிய முடிவாகவே இருக்கும்.

வெற்றிடம்
சசி தரூர் அந்தக் கட்டுரையில், கட்சித் தலைமையில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், ஒட்டுமொத்த கட்சியின் செயல்பாடுகளைப் பாதிப்பதாகத் தெரிவித்தார். மேலும், தலைவர் தேர்தல் என்பது காங்கிரஸுக்கு தேவைப்படும் மறுமலர்ச்சிக்கான தொடக்கம் என்றும் அவர் கூறினார். புதிய தலைவரைத் தேர்வு செய்வது தேசிய அளவில் அதிக வாக்காளர்களைக் காங்கிரஸ் கட்சியை நோக்கி வரவைக்கும் என்றும் சதி தரூர் அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.

பல வேட்பாளர்கள்
மேலும் அவர், "இந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு தாங்கள் வைத்துள்ள திட்டத்தை முன்மொழிய வேண்டும். இது நிச்சயம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உதவும். சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்படும் தேர்தல் செயல்முறை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழியாகும். இது தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு உதவியாக இருக்கும்" என்று அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications