"சச்சின், கோலி போல என்ன ஒரு ஸ்டைல்.." வந்து விழுந்த கேள்வி.. சுப்மன் கில் என்ன சொல்கிறார் பாருங்க
டெல்லி: இப்போது ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், கோலியுடனான ஒப்பீடு குறித்து கில் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.. முதல் போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்கச் சென்னை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போது அதே இரு அணிகள் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இந்த இரு டீம்களும் தான் புள்ளிப்பட்டியலிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தன. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதில் குஜராத் அணியில் பேட்டிங்கில் தூணாக இருப்பவர் சுப்மன் கில். இந்தாண்டில் இவருக்கு ஐபிஎல் தொடர் மகி சிறப்பானதாக இருந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் தொடும் ஒவ்வொரு பந்தும் பவுன்டரி மற்றும் சிக்ஸர்களுக்கு பறக்கிறது. அதிக ரன்களை குவித்த ஆரஞ்ச் கேப் வீரர்களுக்கான பட்டியலிலும் அவர் 850 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் டூபிளஸிஸ் 730 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில்லை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் அவரை கோலி மற்றும் சச்சின் ஆகியோருக்கு இணையாகவும் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஒப்பீடுகள் குறித்து சுப்மன் கில் முதல்முறையாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
23 வயதே ஆன சுப்மன் கில்லுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் மறக்கவே முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. கில் இந்த சீசனில் மூன்று சதங்களை அடித்தார். குறிப்பாக இந்த மூன்றுமே அணிக்கு முக்கியமாகத் தேவைப்படும் கடந்த நான்கு போட்டிகளில் அடித்தவை. அதைத்தொடர்ந்தே கோலி மற்றும் சச்சினுடன் பலரும் கில்லை ஒப்பிட்டனர்.
இருப்பினும், இந்த ஒப்பீடுகள் பொருத்தமற்றவை என்று கில் தெரிவித்துள்ளார். கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்கள் நிறையப் பேருக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும், அவர்களின் சாதனைகளை ஈடு செய்ய முடியாது என்றும் கில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மக்கள் இப்படிக் கூறலாம். ஆனால் நான் உண்மையில் அப்படிப் பார்க்கவில்லை, ஏனென்றால் சச்சின், விராட் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் பலருக்குத் தலைமுறைகளைக் கடந்து ஊக்கமளித்துள்ளனர்.
1983 உலகக் கோப்பையை நாம் வெல்லாமல் இருந்திருந்தால், ஒரு சச்சின் டெண்டுல்கர் கிடைத்திருக்க மாட்டார். 2011 உலகக் கோப்பையைக் காரணமாகவே நான் உத்வேகம் பெற்றேன்.. அவர்களின் சாதனைகள் அழிக்கவே முடியாதவை. அதை மறுக்கவோ அவற்றுடன் ஒப்பீடு செய்யவோ முடியாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications