நீட் மறு தேர்வை இத்தனை மாணவர்கள் எழுதவில்லையாம்.. அடுத்து என்ன நடக்கும்? அவர்களுக்கு மார்க் உண்டா?
டெல்லி: இன்று நடந்த நீட் மறுதேர்வை கிட்டத்தட்ட சரிபாதி மாணவர்கள் எழுதவில்லை. மறுதேர்வு எழுதாத 750 மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து பலரும் அறிய ஆர்வமாக உள்ளனர். அதற்கான விளக்கம் இங்கே..
2024ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1,563 பேருக்கு இன்று மறுதேர்வு 7 மையங்களில் நடைபெற்றது.
சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள சில தேர்வு மையங்களில் கடந்த மே 5 ஆம் தேதி, நீட் தேர்வு காலதாமதமாக தொடங்கியது. காலதாமதம் காரணமாக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
இன்று 750 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதவில்லை.. 48% ஆப்செண்ட்.. ஷாக் தகவலை வெளியிட்ட என்.டி.ஏ!
ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணானது தேசிய தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு இன்று 7 மையங்களில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மறு தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள பதிவில், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் 1,563 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 813 பேர் மட்டுமே தேர்வெழுத வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 48 சதவீதம் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பாலோட்டில் 185 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 115 மாணவர்கள் தேர்வு எழுதினர். 70 பேர் தேர்வெழுத வரவில்லை. சண்டிகரில் 2 பேர் மறு தேர்வு எழுத தகுதியானவர்கள், அவர்கள் இருவரும் வரவில்லை. சத்தீஸ்கரில் 602 பேர் மறு தேர்வுக்கு தகுதி பெற்றனர், 311 பேர் வரவில்லை, 291 பேர் மறுதேர்வு எழுதினர்.
குஜராத்தில் மறுதேர்வு எழுத ஒருவர் தகுதி பெற்றிருந்த நிலையில் அவர் இன்று தேர்வை எழுதினார். ஹரியானாவில் மறு தேர்வுக்கு 494 பேர் தகுதி பெற்றிருந்தனர், அவர்களில் இன்று 207 பேர் தேர்வு எழுத வரவில்லை, 287 பேர் மறுதேர்வு எழுதினர். மேகாலயாவில் 464 பேர் மறு தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 230 பேர் தேர்வு எழுத வரவில்லை, 234 பேர் இன்று மறுதேர்வு எழுதினர்.
ஒட்டுமொத்தமாக 1,563 பேரில் 813 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதியுள்ளனர். 750 பேர் மறுதேர்வில் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட சரிபாதி மாணவர்கள் இன்று மறு தேர்வு எழுதாத நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று மறு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் வழங்கப்படும். இருப்பினும், மறுதேர்வு எழுதாமல் தவிர்த்த மாணவர்களுக்கு ஏற்கனவே அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண் வழங்கப்படும். அதாவது கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்படாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications