அமெரிக்காவே அரண்டு போகும்! ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா நிறுத்தினால்.. உலகெங்கும் எதிரொலிக்கும் பாதிப்பு
டெல்லி: ரஷ்ய எரிபொருளை வாங்குவதாகச் சொல்லியே டிரம்ப் இந்தியா மீது 50% வரியை விதித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் திடீரென எல்லாம் நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் அது இந்தியாவுக்கு மட்டுமில்லை உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அமெரிக்காவிலும் கூட இதன் தாக்கம் எதிரொலிக்கும்.
உக்ரைன் போருக்கு முன், 2021இல் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் 2025ல் இது 35-40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இப்போது இந்தியா ஒவ்வொரு நாளும் சுமார் 1.7-2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. குறிப்பாகக் கடந்த ஜூன் மாதம் கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் 2.08 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருந்தது.

ரஷ்ய கச்சா எண்ணெய்
இது இந்தியாவின் மொத்தக் கச்சா எண்ணெய் தேவையில் 44 சதவீதமாகும். 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் சுமார் 19 மடங்கு அதிகரித்து, 0.1 மில்லியன் பேரல்களில் இருந்து 1.9 மில்லியன் பேரல்களாக உயர்ந்தது. பல மேற்குலக நாடுகள் உக்ரைன் மோதலால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை.
இருப்பினும், ரஷ்யா உடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்ததால் உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. மேலும், ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்கியது. இதனால் மார்கெட் விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியது. இதன் மூலம் 2022 மற்றும் 2024 காலகட்டத்தில் இந்தியா $33 பில்லியன் வரை சேமித்துள்ளதாகச் சொல்கிறார் எரிசக்தி ஆய்வாளர் பெட்ராஸ் கட்டினாஸ்.. இதைத் தான் நிறுத்த வேண்டும் என்கிறார் டிரம்ப். ஆனால், எடுத்தோம் கவிழ்த்தோம் என இதைச் செய்ய முடியாது.
ஏன் ஈஸி இல்லை
ஏனென்றால் கச்சா எண்ணெய் என்பது ஒரு சிக்கலான விஷயம். ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையங்களும் குறிப்பிட்ட கச்சா எண்ணெய் வகைகளைச் சுத்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் நடுத்தர கிரேட் கச்சா எண்ணெய்யை நாம் வாங்குகிறோம். உரல்ஸ் வகையை உதாரணமாகச் சொல்லலாம். இது இந்தியாவின் அதிநவீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் பொருத்தமானவை. குறிப்பாக டீசல் தயாரிப்பதற்கு ஏற்றதாக உள்ளன.. கனரக வாகனங்கள், ரயில்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு டீசல் முக்கிய தேவையாக உள்ளதால் இந்தியாவுக்கு ஏற்றதாக ரஷ்ய எண்ணெய் இருக்கிறது.
சிக்கல்கள்
ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்குவதை உடனடியாக நிறுத்தினால் மத்தியக் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்கா அல்லது அமெரிக்க வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். அந்த நாடுகள் ஏற்கனவே மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்து வரும் நிலையில், இந்தியா உள்ளே போனால் கச்சா எண்ணெய் விலை உயரும்.
- இதனால் குறிப்பிட்ட கிரேட் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்
- கப்பல்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால், சரக்கு கட்டணங்கள் விலை உயர்த்தும்
- ஒருவேளை கிரேட் மாற்றி வாங்கினால், அதைத் திறம்படச் சுத்திகரிக்க முடியாது. இதனால் பற்றாக்குறை கூட ஏற்படும்
உலகெங்கும் பாதிப்பு
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் கூட இதன் பாதிப்பு எதிரொலிக்கும்.. ஏனென்றால் இந்தியா அதிகக் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது மட்டுமின்றி, முக்கியமான சுத்திகரிப்பு நாடாகவும் இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கும் கச்சா எண்ணெய்யில் குறிப்பிட்ட சதவீதம் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாகச் சுத்திகரிக்கப்பட்டு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அவ்வளவு ஏன் ஐரோப்பாவிற்குக் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2023-24 ஆண்டில், ஐரோப்பாவின் டீசல் இறக்குமதியில் சுமார் 15 சதவீதத்தை இந்தியா வழங்கியுள்ளது.
நிலைமை இப்படியிருக்கும்போது திடீரென ரஷ்யக் கொள்முதலைக் குறைத்தால்.. இந்தியா ஏற்றுமதி செய்யும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலையும் உயரும்.. ஐரோப்பாவில் ஏற்கனவே டீசல் இருப்பு குறைவாக இருக்கும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
அமெரிக்கா
இதை எல்லாம் தாண்டியும் இந்தியா ரஷ்ய எண்ணெய்யை நிறுத்திவிட்டது என வைத்துக் கொள்வோம். அப்போது ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை சப்ளையை குறைக்கும். சர்வதேச சந்தையில் சப்ளை குறைந்தால் விலை தானாக உயரும். இதனால் இப்போது 65 டாலருக்கு விற்கப்படும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் $120க்கு கூட போகலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அப்படிக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது அமெரிக்காவையும் பாதிக்கும். அங்கும் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்வு ஏற்படும்.












Click it and Unblock the Notifications