யோகி தொடங்கி யூஜிசி வரை.. 48 மணி நேரத்தில் 3 பக்கங்கள் ஹேக்! அரசு கணக்குகளை குறி வைக்கும் ஹேக்கர்கள்
டெல்லி: அரசுக்குச் சொந்தமான ட்விட்டர் பக்கங்கள் அடுத்தடுத்து ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான ட்விட்டர் தளங்கள் ஹேக் செய்யப்படுவது கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்த இதுபோன்ற நிகழ்வுகள் இப்போது அதிகரித்துள்ளது.
ஹேக் செய்யப்படும் ட்விட்டர் பக்கங்களில் பிட் காயின் தொடர்பான ட்வீட்கள் பதிவிடப்படுவதால், இதில் பொதுமக்கள் ஏமாந்துவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் பக்கங்கள்
இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான 3 ட்விட்டர் பக்கங்கள் வெறும் 48 மணி நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் நேற்றைய தினம் அதிகாலை நேரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதிகாலை ஹேக் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்குப் பின்னரே, இந்த ட்விட்டர் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டது.

உபி முதல்வர் அலுவலகம்
சுமார் 29 நிமிடங்கள் வரை முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் யோகி ஆதித்யநாத் படம் நீக்கப்பட்டு கார்டூன் படத்தை முகப்பு படமாக ஹேக்கர்கள் வைத்தனர். மேலும், இந்த நேரத்தில் சுமார் 400 முதல் 500 ட்வீட்கள் பதிவிடப்பட்டது. இதையடுத்து இதர ட்விட்டர் பயனாளிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்குப் பின்னரே அவரது ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்திய வானிலை மையம்
இது தொடர்பாக லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லக்னோ போலீசார் எச்சரித்துள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை இரவு ஹேக் செய்யப்பட்டது. கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டது. யுஜிசி ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த பிறகு, என்எப்டி தொடர்பான பல ட்வீட்கள் அந்தக் கணக்கிலிருந்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது. சற்று நேரத்தில் அந்த கணக்கு மீட்கப்பட்டது.

UGC ட்விட்டர் கணக்கு
இந்நிலையில், இன்று பிற்பகல் பல்கலைக்கழக மானிய குழு எனப்படும் UGCஇன் ட்விட்டர் கணக்கைச் சிலர் ஹேக் செய்தனர். UGC ட்விட்டர் கணக்கை சுமார் 2.96 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். மேலும், இது அதிகாரப்பூர்வ வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. UGC ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட உடன் NFT தொடர்பாக சில ட்வீட்கள் பதிவிடப்பட்டது. இந்த பக்கமும் விரைவில் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடவடிக்கை தேவை
வெறும் 48 மணி நேரத்தில் அரசுக்குச் சொந்தமான 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹேக்கர்களின் சைபர் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். மேலும், சைபர் தாக்குதலைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,












Click it and Unblock the Notifications