"இன்னும் ஒரு மாசம் கூட இல்லையே!" ஜூலை 13இல் விண்ணில் பாயும் சந்திரயான் 3.. ஏன் ரொம்ப முக்கியம்
டெல்லி: மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதியை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. இந்த ராக்கெட் வரும் ஜூலை 13ஆம் தேதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
விண்வெளி துறையில் உலகின் பல்வேறு நாடுகளும் தீவிர ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதில் இந்தியா மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் உள்ளது. விண்வெளி சார்ந்த சிக்கலான ஆய்வுகளைக் குறைந்த செலவில் செய்வதில் இஸ்ரோ பெயர்பெற்றது.
சந்திரயான் என்ற விண்கலம் மூலம் இந்திய நிலவில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. சந்திரயான் 1 விண்கலம் 2008இல் ஏவப்பட்ட நிலையில், சந்திரயான் 2 2019ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.

சந்திரயான் 3: இதற்கிடையே இந்தியா மூன்றாவது விண்கலமாகச் சந்திரயான் 3ஐ விண்ணில் ஏவ உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் முழு வெற்றியை அடையவில்லை என்றாலும் அது பெரும்பாலான பணிகளை வெற்றிகரமாகவே செய்து முடித்துள்ளது. சந்திரயான்-2 நிலவை வெற்றிகரமாகச் சுற்றி வந்த போதிலும், விக்ரம் லேண்டரால் திட்டமிட்டபடி நிலவில் இறங்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த ரோவரை பயன்படுத்த முடியாமல் போனது.
இருப்பினும், அடுத்து ஏவப்படவுள்ள சந்திரயான் 3 திட்டம் மீது அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். சந்திரயான்-3 நிலவு குறித்த நமது புரிதலை மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர மேற்பரப்பில் சரியாகத் தரையிறங்கி ரோவரை பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும். அதைக் கருத்தில் கொண்டே ஆய்வாளர்கள் இப்போது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். சந்திரயான் 3 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் பாயும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

எப்போது ஏவப்படுகிறது: இதற்கிடையே சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் தேதிகளை அதிகாரிகள் இப்போது உறுதி செய்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணை மூலம் சந்திரான் 3 விண்ணில் பாய்கிறது. 615 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூலை 13ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் பாய உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
சந்திரயான்-3 விண்கலனில் இருக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கும் அது வெற்றிகரமாகச் செல்வதை உறுதி செய்யவும் இப்போது கடுமையான சோதனை நடந்து வருகிறது. சந்திரயான் 2 திட்டத்தை வைத்து அதன் மேம்பட்ட ஒரு பதிப்பாகவே சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 வெற்றியடைய வேண்டும் என்பதில் இஸ்ரோ ஆய்வாளர்கள் உறுதியாக உள்ளனர்.
எதற்குப் பயன்படும்: சந்திரயான் 2இல் இருந்ததை போலவே இதிலும் லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும். அதேநேரம் சந்திரயான் 2இல் இருந்ததை போல இதில் ஆர்பிட்டார் இருக்காது. மேலும், புதிதாக ஸ்பெக்ட்ரோ- போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட் எர்த் (SHAPE) என்ற பேலோடும் இதில் இருக்கிறது. இது பூமியின் துருவ அளவீடு தொடங்கிப் பல விஷயங்களைக் கண்டறிய உதவும். சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ அமைப்பை அடுத்த கட்டத்திற்கு அடுத்துச் செல்லும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications