லோக்சபா தேர்தல் இருக்கட்டும்.. காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது! வெளியான மிக முக்கிய தகவல்
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்விக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முக்கிய பதிலை அளித்துள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த முறை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தல் உடன் காஷ்மீரிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
காஷ்மீர் தேர்தல்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். காஷ்மீரில் எப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாதுகாப்பு காரணங்களுக்காகக் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் லோக்சபா மற்றும் மாநில தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்று காஷ்மீர் தேர்தல் தொடர்பான குழு பரிந்துரை அளித்துள்ளது.
இருப்பினும், அங்கே விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அதை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளன. ஆனால் அங்குள்ள ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களை நடத்த முடியாது என்று கூறியது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 10-12 வேட்பாளர்கள் இருப்பார்கள்..
மொத்த தேர்தல்: மொத்தம் சேர்த்தால் 1,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளர் உடனும் ஒரு குழு இருக்கும். எனவே, அனைவருக்கும் பாதுகாப்பு தருவது கடினம். ஆனால், அங்கே தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்... லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் அங்குத் தேர்தலை நடத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல்.. மக்களே.. உங்கள் மொத்த சந்தேகங்களுக்கும் இதோ விடை! FAQ முழு விவரம்
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மதியம் லோக்சபா தேர்தலுக்கான தேதிகளை வெளியிட்டது.. இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை வரை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டியாகும்.
சிறப்பு அந்தஸ்து நீக்கம்: இப்போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. லோக்சபா தேர்தல் அறிவிப்புடன் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான தேதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனச் சொல்லப்பட்டது. அங்கே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மாநிலம் இரு யூனிசன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அங்கே எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை.
சட்டசபைத் தேர்தல் நடைபெறவில்லை என்ற போதிலும் காஷ்மீரில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக, செப்டம்பர் 30, 2024க்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications