மல்லையா.. இப்போ பொருளாதார குற்றவாளி.. காங்கிரஸ் எங்கே போனீங்க..? வம்பிழுக்கும் மத்திய அமைச்சர்
டெல்லி: விஜய் மல்லையாவை பிரதமர் மோடி காப்பாற்றுகிறார் என்ற புகார் கூறி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது எங்கே போனது என்று மத்திய அமைச்சர் கேள்வி ஜிதேந்திர சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தொழிலதிபர் விஜய் மல்லையா பொருளாதார குற்றவாளி என்று டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது. மேலும் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் ஏதும் அளிக்க முடியாது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், விஜய் மல்லையாவை மோடி அரசு காப்பாற்றுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? எந்தவொரு பகுதியிலும் நடக்கும் நேர்மறையான நகர்வை காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று கூறியுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறுகையில், இது பாஜக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மோடி தலைமையிலான அரசின் மகுடத்தில் மேலும் ஒரு கல். மல்லையாவுக்கு மிகப்பெரிய தொகையை வழக்கமான உத்தரவாதம் கூட இல்லாமல் கடனாக வழங்கியதற்கு காங்கிரஸ் அரசு ஊக்கம் அளித்தது என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications