ஆதித்யா எல் 1 சூரியனுக்கு எவ்வளவு அருகில் செல்லும்? என்னென்ன ஆய்வுகளை செய்யும்?
டெல்லி: ஆதித்யா எல் 1 எனும் விண்கலம் பூமியிலிருந்து சூரியனுக்கு எவ்வளவு அருகில் நிலை நிறுத்தப்படுகிறது தெரியுமா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே எவ்வளவு தூரம் வரை இது செல்கிறது, என்னென்ன ஆய்வுகளை செய்யும்?
சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல் 1 இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்படுகிறது.

சந்திரயான் 3 வெற்றி பெற்ற நிலையில் சூரியன் குறித்த ஆய்வை இஸ்ரோ தொடங்குகிறது. அதன்படி இன்று காலை வீறு நடை போட்டு ஆதித்யா புறப்படுகிறது. இது முற்றிலும் நெருப்பு கோளம் என்பதால் இதில் எப்படி தரையிறங்க முடியும் என பலர் குழப்பத்தில் ஆழ்ந்து வருகிறார்கள்.
சந்திரயான் 3 போல் இந்த ஆதித்யாவும் தரையிறங்காது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லக்ராஞ்சியன் எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த விண்கலம் இந்த புள்ளியை அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும். சூரியன் குறித்த ஆய்வுக்காக விண்கலம் அனுப்பும் 4-வது நாடு இந்தியா ஆகும்.
சூரியனைப் பற்றிய ஆய்வில் லாக்ரேஞ்சியன் புள்ளிகள் மிக முக்கியமானவை. ஆதித்யா எல்-1 ஒன்றரை கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆதித்யா எல்-1 சூரியனை பற்றிய தகவல்களைத் திரட்டி, சூரியனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும். சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலையானது சுமார் 5,500 டிகிரி செல்சியஸ் கொளுத்தி எடுக்கும்.
இந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிக்கு பெயர் கரோனா ஆகும். சூரிய கிரகணம் நடக்கும் போது இந்த கரோனா பகுதியை வெறும் கண்களால் பார்க்கலாம். நேரடியாக பூமிக்கு வரக் கூடிய சூரிய புயல்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 உதவும். சூரிய புயல் தாக்கினால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் இந்த ஆய்வு மிக முக்கியத்துவமானது.
ஆதித்யா எல்-1 ல் மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 4 செயற்கைகோள்கள் சூரியனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நமது செயற்கைக்கோள்களைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், சூரிய வளி மண்டலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் எவ்வாறு விண்வெளி வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சூரியன் குறித்து ஆழமாக ஆய்வு செய்வதற்காகவே இந்த விண்கலம் ஏவப்படுகிறது. ஆதித்யா மட்டும் இல்லாது நிறைய திட்டங்கள் இஸ்ரோவிடம் உள்ளது. ஒவ்வொன்றாக இவை செயல்படுத்தப்படும். இந்த ஆதித்யா இஸ்ரோவின் 59ஆவது திட்டமாகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மொத்த தூரத்தில் 1 சதவீதம் மட்டுமே ஆதித்யா எல் 1 பயணிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications