உயிரே போகும்.! "பக்கவாதம்.." இந்த ரத்த பிரிவு இருக்கா உங்களுக்கு.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்
டெல்லி: பக்கவாதம் என்பது மனிதர்களையே முடக்கிப் போட்டுவிடும் ஆபத்தான ஒரு நோயாகும். இதனிடையே இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல முக்கிய விஷயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நவீன உலகில் உணவுப் பழக்கங்கள், மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்பு அரிதாக ஏற்பட்டு வந்த உடல்நிலை பாதிப்புகள் கூட இப்போது பலருக்கும் ஏற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கேன்சர் போன்ற மோசமான பாதிப்புகள் ரொம்பவே அதிகமாக ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அது மட்டுமின்றி உடலில் தோன்றும் அறிகுறிகளையும் நோட் செய்ய வேண்டி உள்ளது.

பக்கவாதம்
மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இந்த பக்கவாதம் ரொம்பவே ஆபத்தானது. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டால் இந்த பக்கவாதம் ஏற்படும். அல்லது மூளையில் இருக்கும் ரத்தக் குழாய் வெடிக்கும் போதும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் மூளையிலேயே நிரந்தர பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் ஆலோசனையுடன் உரியச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பக்கவாதம் காரணமாக நமது உயிரே கூடப் போகும் அபாயம் உள்ளது.

புதிய ஆய்வு
பக்கவாதத்தின் அறிகுறிகள் நமக்கு வெளிப்படையாகத் தெரியாது. இதனால் பக்கவாதம் ஏதோ உடனடியாக ஏற்படும் பாதிப்பு போல இருக்கும். இதனால் உயிரே போகும் அபாயமும் இருப்பதால் இது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மனிதர்களின் ரத்த வகையின் அடிப்படையில் யாருக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் புதியதொரு முறையைக் கண்டுபிடித்துள்ளனர். மேரிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு வல்லுநர் குழு நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பீடு
இது ஒரு நபரின் ரத்த வகைக்கும் ஆரம்பக்கால பக்கவாதத்திற்குமான தொடர்பை விளக்குகிறது. அமெரிக்க நரம்பியல் அகாடமியின் மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் ஒரு நபரின் ரத்த வகையுடன் தொடர்புடைய மரபணு மாறுபாடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அத்துடன் இளம் வயதில் பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளின் மரபணு ஆய்வுகளில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து டேட்டாக்களையும் ஒப்பீடு செய்து பார்த்தனர்.

ஆய்வாளர் கருத்து
இது குறித்து மேரிலாந்து மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் ப்ராக்ஸ்டன் டி. மிட்செல் கூறுகையில், "இதற்கு முன்பு ஒ பிரிவு ரத்தம் இல்லாதவர்களுக்கு அதிகம் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருப்பதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆய்வு முடிவுகளில் நமக்கு நேர்மாறாக முடிவுகள் கிடைத்தன. சில குறிப்பிட்ட ரத்த வகைகளுடன் இணைக்கப்பட்ட மரபணு மாறுபாடுகளை ஆய்வு செய்த போது அவை, ஆரம்பக்கால பக்கவாதம் (early stroke) ஏற்பட்டோரிடம் ஏற்பட்ட மரபணு மாற்றங்களைப் போலவே இருந்தன. இந்த மரபணு மாறுபாடுகளைக் கொண்டவர்கள் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுவே பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்" என்றார்.

பெரிய ஆய்வு
வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து பக்கவாதம் குறித்து மொத்தம் 48க்கும் மேற்பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பல்வேறு வயதைச் சேர்ந்த பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட 16,927 பேர், மற்றும் பக்கவாதம் ஏற்படாத 5,76,353 பேரிடம் நடத்தப்பட்டன. இந்த 16,927 பேரில் ஆரம்பக்கால பக்கவாதம் (early onset stroke) 5,825 பேருக்கும் தாமதமான பக்கவாதம் ( late onset stroke) 9,269 பேருக்கும் ஏற்பட்டது. ஆரம்பக்கால பக்கவாதம் என்பது 60 வயதுக்கு உட்பட்டோருக்கு ஏற்படும் பாதிப்பாகும்.. தாமதமான பக்கவாதம் என்பது 60 வயதுக்குப் பின் ஏற்படுவது ஆகும்.

ரத்த பிரிவுகள்
ஆரம்பக்கால பக்கவாதம் உள்ளவர்கள் ஏ வகை ரத்தத்தைக் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.. அதிலும் குறிப்பா ஏபி பிரிவு ரத்தம் உள்ளவர்களுக்கு இதன் ஆபத்து அதிகமாக இருக்கிறது. ஓ பிரிவு ரத்தத்தைக் கொண்டவர்களுக்கு மற்ற ரத்த பிரிவு கொண்டவர்களைக் காட்டிலும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.. அதேநேரம் இது பெரும்பாலும் மேற்கத்திய நாட்டவர்களைக் கொண்ட ஆய்வு என்பதால் இதை அப்படியே நம்மால் பொருத்திப் பார்க்க முடியாது. இருப்பினும், இது ஆரம்ப மற்றும் தாமதமான பக்கவாதம் குறித்து நமக்கு ஒரு புரிதலை அளிக்கிறது.

விரிவான ஆய்வு தேவை
இது குறித்து நரம்பியல் வல்லுநர் ஜெனிபர் ஜுல் மஜெர்சிக் கூறுகையில், "பக்கவாதம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் பற்றிய துல்லியமான புரிதலை உருவாக்க வரும் காலத்தில் நீண்ட நெடிய ஆய்வுகள் தேவை. இது பக்கவாதம் பாதிப்புகளைக் குறைக்க உதவும்.. இதன் மூலம் நம்மால் சின்ன வயதில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகளைக் குறைக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications