பாஜகவின் "சர்ப்ரைஸ்.." 3 முறை எம்எல்ஏ.. இப்போது ம.பி. முதல்வராக தேர்வு.. யார் இந்த மோகன் யாதவ்!
டெல்லி: மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யார் அவர்.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வென்றது. இதன் மூலம் இந்தி ஹார்ட் லேண்ட் பகுதி முழுக்க பாஜக வசம் சென்றுள்ளது.

இதில் மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், அதில் 163 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் அங்கே 66 இடங்களில் மட்டுமே வென்றது. இதன் மூலம் பாஜக அங்கே ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
முதல்வர் தேர்வு: அதேநேரம் அங்கே முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை, மத்தியப் பிரதேச தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நரேந்திர சிங் தோமர், மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் போட்டியில் இருந்தனர்.
இப்படி மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பதில் பெரிய போட்டியே நிலவி வந்த நிலையில், இப்போது அம்மாநில முதல்வரை பாஜக தலைமை அறிவித்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத வகையில் மோகன் யாதவை மபி முதல்வராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக சட்டசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மோகன் யாதவ்: 58 வயதான மோகன் யாதவ்.. உஜ்ஜைன் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், 12,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மோகன் யாதவ் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து 2018 மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். 2020இல் கமல்நாத் அரசு கவிழ்ந்த பிறகு சிவராஜ் சிங் சவுகான் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், அப்போது மோகன் யாதவ் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது ம.பி அரசியலில் அவரது செல்வாக்கு மேலும் உறுதியானது..
யார் இவர்: 1965ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்த மோகன் யாதவ், பல ஆண்டுகளாகவே பாஜகவில் இணைந்து பயணித்து வருகிறார். தொழிலதிபரான அவர் பல ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பயணித்து வருகிறார்.
இந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மோகன் யாதவ், உஜ்ஜைன் தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சேத்தன் பிரேம்நாராயண் யாதவை எதிர்த்து 12,941 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தாண்டு தேர்தலில் 95,699 வாக்குகளைப் பெற்ற அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் எம்.எல்.ஏ. தேர்வானார்.
உஜ்ஜைனி மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் உஜ்ஜைன் தெற்குத் தொகுதி கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மோகன் யாதவ் இப்போது மபி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications