மனைவி இல்லாதவர் பிரதமராக கூடாது.. பிரதமர் இல்லத்தில் சிங்கிளாக இருப்பது தப்பு: லாலு சொன்னது யாரை?
டெல்லி: நாட்டின் பிரதமராக வரக் கூடியவர் மனைவி இல்லாதவராக இருக்கக் கூடாது; பிரதமர் இல்லத்தில் சிங்கிளாக ஒருவர் இருப்பது ரொம்ப தப்பு என கலாய்த்திருக்கிறார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி வந்துள்ள லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத கட்சி இரண்டாக உடைக்கப்பட்டுள்ளது; சரத்பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என அஜித்பவார் கூறுகிறாரே என செய்தியாளர்கள் லாலுவிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த லாலு, பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தினோம். பாரதிய ஜனதா கட்சி என்னவிதமான விமர்சனத்தையும் முன்வைக்கட்டும். எங்களுக்கு அதனைப் பற்றி கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரை சரத்பவார் மிகவும் வலிமையானவர். அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றெல்லாம் அஜித்பவார் சொல்லக் கூடாது. அஜித்பவார் சொல்லிவிட்டால் உடனே ஓய்வு பெற்றுவிட வேண்டுமா என்ன? என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இப்போது ஊழல்வாதிகளை ஒருங்கிணைப்பவராக உருமாறிவிட்டார். யாரை எல்லாம் ஊழல்வாதிகள் என்று பிரதமர் மோடி விமர்சித்தாரோ அவர்களுக்கு எல்லாம் அதிகாரத்தை கொடுத்துள்ளார் மோடி.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி மொத்தம் 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவாரா? உங்கள் அறிவுரையை கேட்டு ராகுல் காந்தி திருமணம் செய்வாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு லாலு பிரசாத் யாதவ் அளித்த பதில்:
நாட்டின் பிரதமராக யார் இருந்தாலும் மனைவி உள்ளவராக இருக்க வேண்டும். மனைவி இல்லாதவர் இந்த நாட்டின் பிரதமராக இருக்கக் கூடாது. பிரதமர் இல்லத்தில் மனைவி இல்லாமல் சிங்கிளாக வசிப்பது தவறானது. தற்போதைய பிரதமர் மோடி, பிரதமர் இல்லத்தில் தனியாகத்தான் வசிக்கிறார். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications