சோனியா காந்தி சொன்னதை கேட்க ஒரு பதவியா.. காங்கிரஸ் தலைவர் தேர்தலை கிண்டல் செய்யும் பாஜக
டெல்லி: காங்கிரஸ் புதிய தலைவராக யார் வந்தாலும் பயன் இல்லை என்றும்.. அவர்கள் காந்தி குடும்பத்தினரின் கைப்பாவையாகத்தான் இருக்க போறாங்க.. என்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட யாருடைய அனுமதியை பெற வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
இதன் பின்னர் சசி தரூர் முதல் நபராக போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதற்காக அவர் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இதேபோல் இந்த போட்டியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்காக அவர் வேட்பு மனுவையும் தாக்கல் செய்து விட்டார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கே.என் திரிபாதியும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே விலகல்
எனினும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் சசி தரூருக்கும் தான் நேரடி போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் தான் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. இதிலும் பெரும்பாலும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதற்கு மத்தியில், காங்கிரஸ் புதிய தலைவராக யார் வந்தாலும் பயன் இல்லை என்றும் அவர்கள் காந்தி குடும்பத்தினரின் கைப்பாவையாகத்தான் இருக்க போறாங்க என்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி பேசியுள்ளார்.
கைப்பாவை போலத்தான் செயல்பட போகிறார்கள்
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சுஷில் மோடி இது தொடர்பாக கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வந்தாலும் அவர்கள் சோனியா காந்தி குடும்பத்தின் கைப்பாவை போலத்தான் செயல்பட போகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கேவோ அல்லது வேறு யாரோ... யார் தலைவராக இருந்தாலும் வெறும் முகத்தை மட்டும் காட்டுவார்கள். உண்மையான முடிவுகள் அனைத்தும் காந்தி குடும்பத்தினரால்தான் எடுக்கப்படும்'' என்றார்.
ஏற்றுக்கொள்ள முடியாது
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் சசி தரூர் தனது தேர்தல் அறிக்கையில் இந்திய வரைபடத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டது குறித்து சுஷில் மோடி பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், ''இது தவறுதலாக வெளியிடப்படவில்லை. சசி தரூரின் மனநிலையையே இந்த விவகாரம் காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் போன்ற முக்கியமான பிராந்தியத்தை இந்தியாவில் இருந்து விலக்க முடியாது. தவறாக செய்துவிட்டேன் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சசிதரூர் மற்றும் காங்கிரஸ் மனநிலையை இந்த விவகாரம் காட்டுகிறது'' என்றார்.