இந்தியா முழுவதுமே என் வீடுதான்.. துக்ளக் லேன் அரசு பங்களா வழங்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி பேச்சு!
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, அரசு பங்களா மீண்டும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ராகுல் காந்தி, இந்தியா முழுவதுமே எனது வீடு தான் எனத் தெரிவித்துள்ளார்.
மோடி சமூகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்.பி பதவி தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றது.

இதனால், நான்கு மாதங்களுக்குப் பின்னர் இன்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார் ராகுல் காந்தி. அவரை காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
முன்னதாக, அவதூறு வழக்கில் சூரத் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எம்பி பதவி பறிக்கப்பட்டதால் எம்.பிக்கான வீட்டை விட்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், ராகுலுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து ராகுலுக்கு அவர் இருந்த அதே வீட்டை ஒதுக்க நாடாளுமன்ற குழு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி ராகுல் காந்திக்கு மீண்டும் 12 துக்ளக் லேன் வீடு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஒட்டுமொத்த இந்தியாவும் தனது வீடு என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications