நோட் பண்ணீங்களா! காங் தலைவர் தேர்தல் எல்லாம் சுத்த பொய்! இது "முடிசூட்டு விழா" பாயிண்டை பிடித்த பாஜக
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் உள்ளது. சில ஆண்டுகளாகவே எந்தவொரு முக்கிய தேர்தலிலும் வெல்லாத நிலையில், அங்கிருந்து பல முக்கிய தலைவர்களும் வரிசையாக விலகி வருகின்றனர்.
இதன் காரணமாகக் காங்கிரஸ் தலைமை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதேபோல காங்கிரசுக்கு புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர்
ஏனென்றால், கடந்த 2019இல் மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகிய பின்னர், புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் அக்கட்சி நிர்வாகிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவர் ஆனார். இருப்பினும், வயது காரணமாக சோனியா காந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார். இதையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தது.

தேர்தல்
அதன்படி காங்கிரஸில் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வரும் அக். 17இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு இன்று தொடங்குகிறது. ராகுல் காந்தி தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான அசோக் கெலாட் களமிறங்குகிறார். அதேபோல கேரள எம்பியான சசி தரூரும் தலைவர் பதவியில் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.

பாஜக
இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவர் பதவிக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், இதை பாஜக மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளது. தலைவர் தேர்தல் என்பது வெறும் கண் துடைப்பு என்றும் யார் தலைவர் பதவிக்கு வந்தாலும் அவர் ரிமோட் கண்ட்ரோல் மூலமே கட்டுப்படுத்தப்படுவார் என்றும் பாஜக சாடியுள்ளது.

நோட் பண்ணுங்க
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, "அசோக் கெலாட் அடுத்த தலைவரானால் ராஜஸ்தான் அடுத்த முதல்வர் யார் எனக் கேட்டால் அதைச் சோனியா காந்தி முடிவு செய்வார் என்கிறார் அசோக் கெலாட்.. இதில் இருந்த தெரிகிறது தேர்தல் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்று.. எப்படி சோனியா காந்தியால் முதல்வரைத் தேர்வு செய்ய முடியும். அவர் முன்னாள் தலைவர் தானே.. ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் சேர்ந்து தானே புதிய முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும்.

மன்மோகன் சிங் போல
நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கண்ட்ரோல் இருக்கும் என்றால் எதற்காக இந்தத் தேர்தலை நடத்த வேண்டும்? ப. சிதம்பரமும் ராகுல் காந்திக்குக் கட்சியில் எப்போதும் முக்கிய பொறுப்பு இருக்கும் என்கிறார். இதுவே மற்றொரு ஆதாரம். எப்படி மன்மோகன் சிங்கை சோனியா காந்தி கட்டுப்படுத்தினாரோ.. அதேபோலத் தான் அடுத்த காங்கிரஸ் தலைவரை நேரு குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள்.

முடிசூட்டு விழா
இது தேர்தலே இல்லை. இது வெறும் முடிசூட்டு விழா தான்.. தலைவர் தேர்தலில் யார் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்களே கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் அதைக் கூட இவர்களால் நிறைவேற்ற முடியவில்லையே. இதெல்லாம் சும்மா.. நியாயமான தேர்தலே இல்லை" என்று அவர் கடுமையாகத் தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications