"பல்லு பட்டாலே பேராபத்து.." வீட்டில் பூனை வளர்க்கறீங்களா.. இதை படிங்க! உயிரே போகவும் வாய்ப்பிருக்கு
டெல்லி: வீடுகளில் வளர்க்கும் பூனை கடிக்கும் போது அல்லது கீறும் போது அதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். அப்படித்தான் அதைக் கண்டுகொள்ளாமல் விட்ட ஒருவர் உயிரையே இழந்துள்ளார்.
இப்போது பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி பெற்றோருடன் இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பல நேரங்களில் வீட்டில் பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லாமல் இருக்க நேரிடும்.
இதுபோன்ற நேரங்களில் தனிமை உணர்வு ஏற்படாமல் இருக்கவும் நேரத்தைப் போக்கிக் கொள்ளவும் அவர்கள் செல்ல பிராணிகளை வளர்க்கிறார்கள். இந்தியாவில் அதிகம் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் பட்டியலில் நாயும் பூனையும் டால் இடங்களில் உள்ளன.

பூனைகள்
நகர்ப்புறங்களில் வீடுகள் சிறிதாகவே இருக்கிறது. இதில் நாய் வளர்க்க வேண்டும் என்றால், அதற்குக் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். இதனால் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் பூனைகளையே அதிகம் வளர்க்கிறார்கள். பூனைக்கு எனத் தனியாக இடம் தேவையில்லை. யாருக்கும் தொல்லை தராமல் பூனை தனியாகச் சுற்றிக் கொண்டிருக்கும். அதன் சேட்டைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நமக்குத் தனிமை எண்ணமே வராது. பலரும் பூனையை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.

உலா வரும் பூனைகள்
பெட் ரூம் முதல் கிட்சன் வரை பூனை எல்லா ரூம்களிலும் ஹாயாக உலா வரும். அதேபோல பல நேரங்களில் பூனை நம்மைக் கீறியும் வைக்கும். சில நேரங்களில் அது நம்மைக் கடித்து வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பூனை என்பதால் இதனால் பெரிய ஆபத்து ஏற்படாது என்றே நம்மில் பலரும் நினைப்போம். ஆனால், உண்மையில் பூனை கடி ஆபத்தானது. இதனால் ஒருவர் தனது உயிரையே இழந்துள்ளார். வளர்ப்பு பூனை கடித்ததால் மோசமான பாக்டிரீயா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சின்னதா ஒரு கடி
டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் ஹென்ரிக் க்ரீக்பாம் பிளெட்னர். இவர் கடந்த 2018இல் பூனை ஒன்றையும் அதன் குட்டியையும் தத்தெடுத்துள்ளார். 2018 ஆகஸ்ட் மாதம் பூனைக்குட்டிகளை தூக்க முயன்ற போது, தாய்ப் பூனை அவரது ஆள்காட்டி விரலைக் கடித்ததுள்ளது. சிறிய காயம் என்பதால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் இந்த சிறிய காயம் தான் அவரது உயிரைக் குடித்தது. சில வாரங்களில் அவரது கை இரண்டு மடங்கு வீங்கிவிட்டது. இதனால் ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

ரத்த நாளங்கள் பாதிப்பு
அங்கு ஒரு மாதம் அட்மிட் ஆகியிருந்த அவருக்கு மொத்தம் 15 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டன. இருப்பினும், இது வெறும் தொடக்கம் தான். ஆப்ரேஷன் செய்து 4 மாதங்கள் ஆன பிறகும், அவரது விரல் ஒழுங்காகச் செயல்படவில்லை. இதனால் மற்ற விரல்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி மருத்துவர்கள் பூனை கடித்த அவரது ஆட்காட்டி விரலை அகற்றிவிட்டனர். இதுவும் கூட அவரை காப்பாற்றவில்லை. ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வந்தது. பூனை கடி அவரது ரத்த நாளங்களையும் பாதித்துவிட்டது.

என்ன நடந்தது
மருத்துவர்கள் அவரை விரிவான சோதனை செய்து பார்த்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது பூனை கடித்த போது, கொடூரமான சதை உண்ணும் பாக்டீரியா அவரது உடலில் புகுந்துள்ளது. பூனை கடித்த கொஞ்ச நேரத்திலேயே காயம் மூடப்பட்டது. இதனால் அந்த கொடிய பாக்டீரியா அவரது உடல் முழுக்க பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாகவே அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பற்ற முடியவில்லை. கடந்த அக்டோபர் மாதம் ஹென்ரிக் சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.

உரிய சிகிச்சை தேவை
பூனை பல் பட்ட விவகாரத்தை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதது அவரது உயிரையே பறித்துள்ளது. நான்கு ஆண்டுகள் படாதபாடு பட்டு, மருத்துவமனையிலேயே இருந்தும் கூட அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் பூனை கடியை யாரும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பூனைகள் தங்கள் வாயில் பல வகையான பாக்டீரியாக்களை எடுத்துச் செல்கிறது. இதனால் பூனை கடிக்கும் போது கடித்த காயங்களில் தொற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

என்ன ஆபத்து
மேலும், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு உரியக் கால இடைவெளியில் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி போட வேண்டும். இல்லையென்றால் ரொம்பவே பெரிய பாதிப்பு ஏற்படும். வீதிகளில் சுற்றும் பூனைகளுக்குத் தடுப்பூசி எதுவும் போடப்பட்டிருக்காது என்பதால் நாம் இன்னுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பூனைக்கு மிகவும் ஷார்ப்பான பற்கள் உள்ளது. இதனால் அவை கடிக்கும் போது, திசுக்களில் ஆழமாகப் பாக்டீரியாவை செலுத்திவிடுகிறது. பூனை கடியின் துளை விரைவாக மூடிவிடும் என்பதால், பாக்டீரியா நமது உடலில் லாக் ஆகிவிடும் அபாயம் உள்ளது. பார்டோனெல்லா ஹென்செலே என்ற நோயால் பாதிக்கப்படும் பூனை நக்கும்போது, கடிக்கும்போது அல்லது கீறும் போது அந்த பாதிப்பு மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications