ஹிஜாப் தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியது ஏன்? நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பில் சொன்னது இதுதான்!
டெல்லி: ஹிஜாப் தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா விளக்கம் அளித்துள்ளார் .
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்துள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இன்னொரு பக்கம் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இந்த வழக்கில் ஹிஜாப்பிற்கு தடை விதித்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தெரிவித்து உள்ளார். அவர் தனது தீர்ப்பில்.. மத ரீதியிலான உடையை மாணவிகள் அணிவது என்பது அடிப்படை உரிமையில் வருமா? இஸ்லாத்தில் உடை அணியும் விவகாரம் என்பது கட்டாய மத பழக்க வழக்கங்களில் வருகிறதா? என்பதே கேள்வி. இந்த தடை காரணமாக கல்வி எந்த வகையிலாவது பாதிக்கப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில்தான் இருக்கிறது.

அந்த பதில் இல்லை. அதன் காரணமாக இந்த மேல்முறையீட்டு மனுவை நான் தள்ளுபடி செய்கிறேன். இதில் பல விதமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. என்னுடைய உத்தரவில் மொத்தம் 11 கேள்விகளை நான் முன்வைத்து உள்ளேன். முதல் கேள்வி இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் உடை விவகாரத்தில் முடிவு எடுக்கலாமா என்று கேள்வி எழுப்பினேன்.
அதேபோல் ஹிஜாப்பை தடை செய்வது என்பது சட்ட விதி 25க்கு எதிரானதா என்றும் கேள்விஎழுப்பினேன். இந்த உரிமை என்பது நீக்கவே முடியாத கட்டாய உரிமையா என்ற கேள்வி எழுந்தது. அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை தடுக்கிறதா என்ற கேள்விகளை முன் வைத்தேன். இந்த கேள்விகளின் அடிப்படையில்தான் எனது தீர்ப்பை வழங்கி உள்ளேன் என்று நீதிபதி ஹேமந்த் குப்தா குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதில், பர்கா அணிவது மத அடிப்படையிலான அடிப்படை உரிமை இல்லை என்றால்? மத அடிப்படையிலான பழக்கம் இல்லை என்றால் அது என்ன மாதிரியான பழக்கம்? குரானில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் கடவுள் சொன்ன வார்த்தைகள். அதனால் அவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயம் என்று மனுதாரர்கள் வாதம் வைக்கிறார்கள். இஸ்லாமில் இருக்கும் அடிப்படை கட்டாய பழக்கங்களில் ஒன்று ஹிஜாப் என்று மனுதாரர்கள் கூறுகிறார்கள். பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அவர்கள் மதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்களே. அந்த பழக்க வழக்கம் எது வரை செல்லுபடியாகும் என்று சொல்ல வேண்டும்.

பாகிஸ்தானில் இருந்து ஒரு நீதிபதி இந்தியா வந்தார். அவர்களின் சிறுமிகள் இந்தியாவில் ஹிஜாப் அணியவில்லை. பாகிஸ்தான் பஞ்சாப்பில், இந்தியா பஞ்சாப்பில் பல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அங்கே பலர் ஹிஜாப் அணிவது இல்லை. உத்தர பிரதேசம், பீகாரில் பல இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிவது இல்லையே.
ஹிஜாப் பற்றி குரானில் இருக்கிறது என்பதற்காக அது இஸ்லாமியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கம் என்று கூறலாமா நேற்று நீதிபதி ஹேமந்த் குப்தா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications