இங்க வேண்டாம்.. சிக்கல் ‘அமித்ஷா கோபம்?’- எடப்பாடி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நழுவியது இதுக்கு தானா?
டெல்லி : டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பற்றிய கேள்வியைத் தவிர்த்ததற்குப் பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் 20 நிமிடங்கள் பேசிய எடப்பாடி பழனிசாமி அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அமித் ஷாவிடம் அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சாரி வணக்கம் என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிரித்தபடியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அமித்ஷா சொன்னதற்கு மாறாக ஓபிஎஸ்ஸை டெல்லியிலேயே வைத்து விமர்சிப்பது சரியாக இருக்காது என்பதாலும் தனது பேச்சை பாஜக மேலிடம் கவனிப்பதன் காரணமுமாகவே ஓபிஎஸ் பற்றிய கேள்வியை ஈபிஎஸ் தவிர்த்ததாக சொல்லப்படுகிறது.

அதிமுக + பாஜக
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் முதல் நீடித்து வரும் உட்கட்சி பிரச்சனைகளை டெல்லி பாஜக கூர்ந்து கவனித்து வரும் நிலையில், பலமுறை பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டபோதும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. பாஜக மேலிடம் ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புகிறது. ஆனால், சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க மறுப்பு தெரிவித்து வந்த ஈபிஎஸ், இப்போது ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செல்லவும் மறுத்து வருகிறார்.

கிரீன் சிக்னல்
எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் பாஜகவின் முயற்சிகள் தோல்வியடைந்த காரணத்தால் பாஜக மேலிடம் அவர் மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் காரணமாக பல முறை கேட்டும் பிரதமர் மோடி, ஈபிஎஸ் சந்திப்பைத் தவிர்த்தார். இந்நிலையில், பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், மீண்டும் டெல்லியில் மூவ் செய்தார் எடப்பாடி. இந்நிலையில் தான் அவரை சந்திக்க பாஜக மேலிடம் கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.

திடீர் டெல்லி விசிட்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் சென்றனர். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் 3 நாள் பயணத்திற்கு திட்டமிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மேலும் பல முக்கிய புள்ளிகளையும் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

20 நிமிடங்கள்
எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது பற்றி தெரிவித்ததாகவும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் பற்றி பேசியதாகவும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் பற்றிய கேள்வி
அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "சாரி வணக்கம்" எனக் கூறி பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிரித்தபடியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் இருக்கும்போது ஓபிஎஸ் பற்றிய கேள்விகளுக்கு, கடுமையாக அவரைச் சாடி பதில் அளிக்கும் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் இருக்கும்போது ஓபிஎஸ் பற்றிய கேள்வியைத் தவிர்த்தது பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

என்ன காரணம்?
அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் முடிவை அமித்ஷாவும் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதையொட்டி அதிமுகவின் வாக்குகள் சிதறுவதை தடுக்க சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா அவ்வாறு அறிவுறுத்தியதால் தான், உடனே, ஓபிஎஸ்ஸை விமர்சித்து எடப்பாடி பழனிசாமியால் எந்தவொரு பதிலையும் சொல்ல முடியவில்லை.

விமர்சிக்கவும் முடியாது
அமித்ஷா சொல்லிவிட்டார் என்பதற்காக திடீரென ஓபிஎஸ் பற்றி நல்ல விதமாகவும் சொல்ல முடியாது, அதே நேரம், விமர்சிக்கவும் முடியாது. அமித்ஷாவை சந்தித்த உடனேயே அதுவும் டெல்லியில் வைத்தே ஓபிஎஸ்ஸை விமர்சித்தால் பாஜகவின் பேச்சைக் கேட்கவில்லை என்றாகிவிடும். தனது பேச்சை பாஜக மேலிடம் நிச்சயம் கவனிக்கும் என்பதாலேயே ஓபிஎஸ் பற்றிய கேள்வியை ஈபிஎஸ் தவிர்த்து 'சாரி வணக்கம்' என்பதோடு முடித்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications