என்னை தகுதிநீக்கம் செய்தது ஏன்? பிரதமர் மோடியை குறிப்பிட்டு ராகுல் கூறிய முக்கிய பாயிண்ட்!ஆக்ரோஷம்
டெல்லி: எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரது தகுதி நீக்கத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு ராகுல் காந்தி ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் எம்பியாக இருந்த கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானது. மேலும் அந்த தொகுதி காலியானதாக இன்று தேர்தல் ஆணையத்தின் மூலம் முறைப்படி அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேல்முறையீடு செய்ய திட்டம்
இதற்கிடையே ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்ட தண்டைனைய எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசு இதனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் எதற்காக உங்களை தகுதி நீக்கம் செய்தார்கள் என நினைக்கிறீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி ,‛‛ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிரதமருக்கும்,அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்ற காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். அதானி பிரச்சனையை திசை திருப்ப இந்த நாடகத்தை கையில் எடுத்துள்ளனர்.

தீர்ப்பை விமர்சிக்கவில்லை
மேலும் எனக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இருப்பினும் நான் கேட்கும் கேள்விகளை யோசித்து கேட்கிறேன். பிரதமர் மோடி பயத்தின் காரணமாக என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார். நான் தொடர்ச்சி கேள்விகளை கேட்பேன். சிறையில் அடைத்தாலும் நான் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்

பதவி இல்லாவிட்டாலும் கூட..
லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்றார். அதேபோல் உங்களின் தகுதி நீக்கத்துக்கும் நீதிமன்றம் தடை விதிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, ‛‛பதவி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி நான் எனது பணியை செய்து கொண்டிருப்பேன்'' என்றார். அதாவது லட்சத் தீவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது பைசல் கொலை முயற்சி வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் அவரது எம்பி பதவி பறிப்புக்கான தகுதி நீக்கம் செல்லாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து எம்பி பதவியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முகமது பைசல் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications