அவதூறு வழக்கில் ராகுல் தப்பித்தது எப்படி? உச்சநீதிமன்றம் கேட்ட ஒற்றை கேள்வி இதுதான்! என்ன நடந்தது?
டெல்லி: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இன்று உச்சநீதிமன்றம் கேட்ட ஒற்றை கேள்வி பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பெயர் தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‛மோடி' என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் எனும் வகையில் அவர் பேசியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.

ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி தனது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமு் என கோரியிருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா, சஞ்சய்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதாவது ராகுல் காந்திக்கு ஏன் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்து என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதாவது இன்றைய விசாரணையின்போது ராகுல் காந்தி விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி அவரது சார்பில் வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி வாதாடினார். அப்போது அவர், ‛‛ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி தனது புலப்பெயர் மோடி இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார். ராகுல் காந்திக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்பது சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அவதூறு வழக்கை ஒழுக்ககேடாக கருதி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை. மேலும் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு என்பது சமூகத்துக்கு எதிரானதாகவோ, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களை போன்றதற்கு நிகரானது இல்லை. இருப்பினும் அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது'' என வாதாடினார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‛‛ராகுல் காந்தி மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா?'' என்ற கேள்விகளை கேட்டனர். அதற்கு அபிசேக் மனு சிங்வி, ‛‛ராகுல் காந்தி இதுவரை எந்த வழக்குகளிலும் தண்டிக்கப்படவில்லை. அவர் ஒரு கொடுங் குற்றவாளி இல்லை. அவருக்கு எதிரான வழக்குகள் பாஜகவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு வாட்ஸ்அப் துண்டு தகவல் அடிப்படையில் தான் இந்த வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுதவிர வழக்கை தொடர்ந்த நபரே மீண்டும் அதனை வாபஸ் பெற்றார். அதன்பிறகு அவரே விசாரணை கோரினார்'' என்பதை சுட்டிக்காட்டினார்.
இதை கேட்ட நீதிபதிகள் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது? இந்த தண்டனை விதிக்க சூரத் நீதிமன்றத்துக்கு அவசியம் என்ன?, அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிப்புக்கான உரிய காரணம் என்ன? என்பது பற்றி புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞரிடம் கோரினார். அதன்பிறகு 5 நிமிடம் இடைவேளை கொடுத்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இந்த வேளையில் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சூரத் உயர்நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதனால் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்












Click it and Unblock the Notifications