நீட் வினாத்தாள் கசிந்தும் கூட மத்திய அரசு தேர்வை ரத்து செய்யாதது ஏன்! பின்னணியில் என்ன நடந்தது! பரபர
டெல்லி: இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன விவகாரம் நாட்டில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நீட் தேர்வை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மத்திய அரசு ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்பது தொடர்பாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
இந்தாண்டு நீட் தேர்வு தொடர்பாகத் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் விளக்கமளித்துள்ளனர். இதற்கிடையே நீட் தேர்வை ஏன் மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு: நீட் வினாத்தாள் கசிவு என்பது குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதித்தது என்ற அவர், கடந்த காலங்களில் அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சூழல்களில் மட்டுமே நுழைவு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், இப்போது நீட் தேர்வை ரத்து செய்தால் அது தேர்ச்சி பெற்ற பல லட்சம் மாணவர்களைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நீட் விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதாகவும், நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் மத்திய அரசு கட்டுப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னணி என்ன: இந்தாண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720க்கு 720 மார்க் எடுத்தனர். இதுவே பிரச்சினை முதலில் எழக் காரணமாகும். நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாலேயே இத்தனை பேர் முழு மார்க் எடுத்ததாகப் பலரும் விமர்சித்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இருப்பினும், வினாத்தாள் லீக் என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடந்தது என்றும் இதில் பீகாரைச் சேர்ந்த ஓரிரு மாணவர்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளதாகக் கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் பீகாரில் ஒரு மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில மாணவர்களிடம் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தர்மேந்திர பிரதான் விளக்கம்: இது தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேலும் கூறுகையில், "நீட் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனது ஒரு நிர்வாக தோல்வி.. நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டை ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அரசு அமைக்கும். அதேநேரம் இந்த லீக் பெரியளவில் இல்லை என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சில தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்தால் முறையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அது நியாயமற்றது.
விளக்கம்: நாங்கள் பீகார் காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.. அமைப்பில் உள்ள நிர்வாக சிக்கல்கள் சரி செய்யப்படும். இந்த அரசு இதுபோன்ற எந்தவொரு முறைகேடுகளையும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது.
இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயல்கிறார்கள். அவர்களிடம் நான் விடுக்கும் கோரிக்கை ஒன்று தான். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications