உலக அரசியல் மாறுதே! இந்திய ராணுவத்தை உள்ளே விட மறுக்கும் மாலத்தீவு அதிபர்! பின்னணியில் சீனா?
டெல்லி: மாலத்தீவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள முகமது முய்ஸு இந்தியா ராணுவம் அங்கிருந்து உடனடியாக வெளியேறியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அவர் ஏன் இப்படிச் செய்கிறார்.. அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மாலத்தீவின் அதிபராகப் பதவியேற்ற முகமது முய்ஸு, தங்கள் நாட்டில் வெளிநாட்டு ராணுவம் இருப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அங்கே இருக்கும் வெளிநாட்டு ராணுவத்தை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு நமது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்த நிலையில், அப்போது முறைப்படி அங்குள்ள இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்தார்.
முக்கிய முடிவு: அதேநேரம் மாலத்தீவு மக்களின் நலன் கருதி இரு நாடுகளும் இணைந்து அடுத்தகட்ட தீர்வுகள் குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாலத்தீவில் இப்போது 70 இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அங்கு இந்தியாவால் வழங்கப்படும் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களைக் கண்காணித்து இயக்குகிறார்கள். மேலும், அங்கே உள்ள இந்தியப் போர்க்கப்பல்கள் மாலத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ரோந்தும் சென்று வருகிறது.
இனி உங்களுக்கு இடமில்லை! அதிபராக பதவியேற்ற மறுநாளே.. இந்திய ராணுவத்தை வெளியேற சொன்ன மாலத்தீவு அதிபர்
மாலத்தீவு ஒரு தீவு நாடாக இருக்கும் நிலையில், திடீரென யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மாலத்தீவின் முக்கிய தீவில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். இதற்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டர்கள் பெரியளவில் உதவியிருக்கிறது. இதை மாலத்தீவு அதிபரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும், கூட அவர் அங்கிருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
சின்ன நாடு: மாலத்தீவைப் பொறுத்தவரை அது பரப்பளவில் மிகச் சிறிய நாடு. அது நமது தலைநகர் டெல்லியின் ஒட்டுமொத்த பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இருக்கிறது. அதன் மக்கள் தொகையும் வெறும் 5 லட்சம் தான். மாலத்தீவின் முக்கியமான வருவாயே அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் தான். என்ன தான் சிறிய நாடாக இருந்தாலும் இந்தியப் பெருங்கடலில் முக்கியமான இடத்தில் அது அமைந்துள்ளது. இந்தியா- சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாலத்தீவு ஒரு புவிசார் அரசியல் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.
இந்த புவிசார் அரசியல் காரணமாக இந்தியாவும் சீனாவும் கடந்த பல ஆண்டுகளாகவே மாலத்தீவில் தொடர்ச்சியாகத் தாராளமாக முதலீடு செய்துள்ளன. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புவதாக மாலத்தீவு புதிய அதிபர் கூறினாலும் கூட, புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கும் அளவுக்கு தாங்கள் பெரிய நாடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கம்: முகமது முய்ஸு அதிபராகும் முன்பு மாலத்தீவில் அதிபராக இருந்தவர் இப்ராஹிம் முகமது சோலி. அவர் அதிபராக இருந்த போது தான் இந்தியா மாலத்தீவு இடையே உறவு மேம்பட்டது. எனவே தற்போது அதிபராக இருக்கும் முய்ஸு சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். மாலத்தீவு அதிபர் தேர்தலுக்கு முன்பே அவர் சீனாவுடன் வலுவான உறவை விரும்புவதாகக் கூறியிருந்தார். அதிபர் தேர்தலில் வென்றவுடன் இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி முய்ஸு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்று கூற ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் அனைத்து நாடுகள் உடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆனால், பாதுகாப்பு என்று வரும் போது ரேட் லைன் இருக்கிறது. அதை யாரும் தாண்டக் கூடாது. மாலத்தீவும் மற்ற நாடுகளின் ரேட் லைனில் வர மாட்டோம்" என்று தங்கள் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
அடுத்து என்ன: இந்திய ராணுவத்தை வெளியேற்றிவிட்டு சீனா ராணுவத்தை அனுமதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்ற அவர், இந்தியா மற்றும் சீனா என இரு நாடுகள் உடனும் மாலத்தீவு சமநிலையான உறவையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அவர் இப்போது என்ன தான் இப்படிச் சொன்னாலும் வரும் காலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனா உள்ளே வர வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications