ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்ற பரபர பின்னணி!
டெல்லி: 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளதன் பின்னணி என்ன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள்தான் மூல காரணம் என்பதுதான் பல அரசியல் விமர்சகர்கள் பார்வையாக இருக்கிறது.
குறிப்பாக உத்தரபிரதேச சட்டசபை தேர்தலும், பஞ்சாப் தேர்தலும்தான் இந்த முடிவை நோக்கி மத்திய அரசை தள்ளியுள்ளது.

அரசியல் சாதுர்யம்?
இது பல்டி என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் முன் வைக்கப்பட்டாலும், பிரதமர் மோடி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயன்றுள்ளார். விவசாயச் சட்டங்கள் காரணமாக, மேற்கு உ.பி., ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் கடந்த ஓராண்டாக டெல்லி-உ.பி., டெல்லி-ஹரியானா எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு விவசாயிகள் போராட்டம் பெரும் தடையாக கருதப்பட்டது, ஆனால் சட்டம் நீக்கப்படும் என்று அறிவித்ததன் மூலம், பா.ஜ.க., தடைக் கல்லை அகற்றியது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளின் அரசியல் வியூகத்தை தகர்த்துள்ளது.

நிலைமை மாறிவிட்டது
2014 லோக்சபா, 2017 சட்டசபை மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், மேற்கு உ.பி.,யில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றது. மூன்று தேர்தல்களிலும், பல முனைப் போட்டிகளால் பாஜக அதிக பலன் அடைந்தது. ஆனால் விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு நிலைமை மிகவும் மாறிவிட்டது. 2022ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மேற்கு உ.பி.யில் விவசாயிகள் போராட்டம் பாஜகவிற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளான, சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் காங்கிரஸ் கடந்த காலங்களில் பல மகாபஞ்சாயத்துகளை ஏற்பாடு செய்தன. 2013 முசாபர்நகர் கலவரத்திற்குப் பிறகு பிளவுபட்ட ஜாட்-முஸ்லீம் ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்ட அவை முயன்றன.

விவசாயிகள் கூட்டம்
கிசான் மகாபஞ்சாயத் பாஜகவின் கவலைகளை மேலும் அதிகரித்தது. பின்னர் செப்டம்பர் 5ம் தேதி, கிசான் ஐக்கிய முன்னணியின் தலைமையில் முசாபர்நகரில் ஒரு மகாபஞ்சாயத்து நடைபெற்றது, அங்கு ஏராளமான விவசாயிகள் ஒன்று கூடினர். இது பாஜக தலைவர்களின் அறிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. பாஜக தலைமை தனது உ.பி. தலைவர்களிடம் இருந்து நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கு உ.பி.யில் பா.ஜ.க. பின்னடைவை சந்திக்கும் என்றுதான் கூறப்பட்டிருந்தது.

பாஜக சாதனை
2017-ல் மேற்கு உ.பி.யில் மொத்தமுள்ள 136 தொகுதிகளில் 109 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதேசமயம் 2012 தேர்தலில் 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 2014ஆம் ஆண்டை விட 2019 மக்களவைத் தேர்தலில் 5 இடங்களை இழந்தது. சமாஜ்வாதி-ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணியே இதற்கு முக்கிய காரணம். விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தும் பாரதிய கிசான் யூனியன் மற்றும் அதன் தலைவர்கள் இந்த பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கிம்பூர் கேரி பயங்கரம்
விவசாய போராட்டங்கள் ஒரு பக்கம் என்றால், லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் விவசாயிகளின் அரசாங்கத்தின் மீதான கோபத்தை அதிகரித்தது. இந்த சம்பவத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட 4 விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவரும் பாஜக ஆதரவாளர்களின் கார் மோதி உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாட்-முஸ்லீம் நட்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது விவசாயிகள் போராட்டம். இதனால் மேற்கு உ.பி.யில் ஜாட்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்தனர். இது பாஜகவினரின் கவலையை அதிகரிக்கச் செய்தது. உண்மையில், 2013 க்கு முன்பு, ஜாட்கள் ராஷ்ட்ரிய லோக்தளத்தின் ஓட் பேங்க் என்று கருதப்பட்டனர், ஆனால் முசாபர்நகர் கலவரத்தால், முஸ்லீம்கள்-ஜாட்கள் இரண்டாக பிரிந்தனர். அரசியல் சூழ்நிலையை மாற்றியது. ஜாட்-முஸ்லிம் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டதால் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நேரடியாகப் பலனளித்தது.
Recommended Video

பாஜகவின் குறி
விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை உணர்ந்த பாஜக, மேற்கு உ.பி.யில் பிரச்சாரத்தை அதிகரித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கைரானாவுக்குச் சென்றிருந்தார், அங்கு அவர் சமாஜ்வாடி கட்சியைக் குறிவைத்து, பிரச்சாரம் நடத்தினார். யோகி மேற்கு உ.பி.யில் தனது பயணத்தின் போது பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2014 தேர்தல் முதல் இந்தப் பகுதியில் தங்களுக்கு கிடைத்த செல்வாக்கை தவற விடக் கூடாது என்பதில் பாஜக முனைப்பு காட்டியது. இதனால் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆக மொத்தம், மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதன் மூலமாக தங்களது வெற்றியை உறுதிசெய்வது, எதிர்கட்சிகளின் அரசியலை நிர்மூலமாக்குவது என, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வேலையை செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.












Click it and Unblock the Notifications