லோக்சபா தேர்தல்: அனல் பறக்கும் ராஜீவ் மீதான புகார்கள்... எல்லாமே 'வாக்கு வங்கி' அரசியல்?
டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது அடுக்கடுக்கான புகார்கள் அனல் பறக்கின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜீவ் மீதான இப்புகார்கள் அனைத்தும் 'எதைத் தின்றால் தெளியும்' என்கிற வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தல் பிரசார கூட்டங்களில் சாதாரண மேடைப் பேச்சாளரைப் போல பேசி வருகிறார் பிரதமர் மோடி. கண்ணீர் விடுவது, என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் என்றும் கூட பேசிப் பார்த்தார்.

திடீர் புகார்கள்
ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவின் போதும் ஏதேனும் ஒரு பரபரப்பான பேச்சை அல்லது குற்றச்சாட்டை முன்வைப்பது பிரதமர் மோடியின் பாணி. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அரசின் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள், கல்வியாளர்கள் பலரும் பதில் கொடுத்து வருகின்றனர்.

ராஜீவ் ஊழல்வாதி
ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் 1- ஆக இருந்து மரணித்துப் போனவர் என முதலில் கூறினார் பிரதமர் மோடி. ஆனால் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ஆதாரமே இல்லை என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது மறந்துவிட்டாரா மோடி? என முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சீறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது என பதில் கொடுத்தார்.

பாஜகவில் கலகக் குரல்
இதனைத் தொடர்ந்து நாட்டின் போர்க்கப்பலை உல்லாச கேளிக்கைகளுக்குப் பயன்படுத்தியவர் ராஜீவ் காந்தி என அடுத்த அஸ்திரத்தை ஏவினார். இதை முன்னாள் கடற்படை அதிகாரிகள் பலரும் மறுத்து வருகின்றனர். அத்துடன் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் ஏன் இப்போது பேசுகிறார் என பாஜகவில் இருந்தே கலகக் குரல்கள் வெளிப்பட்டன.

சீக்கியர் படுகொலையில் ராஜீவ்?
இதனைத் தொடர்ந்து 1984-ல் சீக்கியர்கள் படுகொலைக்கு காரணமே பிரதமராக இருந்த ராஜீவ் பிறப்பித்த உத்தரவுதான். அன்று ராணுவத்தை அவர் அனுப்ப மறுத்ததால் டெல்லியில் 2,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன என மூத்த வழக்கறிஞர் பூல்கா குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்படி ராஜீவ் மறைந்து 28 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் மீது திடீரென புகார்கள் அணிவகுப்பது அரசியல் களத்தை பரபரக்க வைத்திருக்கின்றன.

ஏன் ராஜீவ் விவகாரம்?
லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை தொங்கு நாடாளுமன்றம் என்பதுதான் உறுதியாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களில் அமைத்த மெகா கூட்டணியால் பாஜகவுக்கு பின்னடைவு காத்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவின் போதும் உணர்வுப்பூர்வமான, கோபங்களை கிளறும் வகையிலான, பழைய ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்படுகின்றன. வாக்காளர்களை தற்போதைய பிரச்சனைகளை மடைமாற்றுகிற வாக்கு வங்கி அரசியல் யுக்திதான் இது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications