கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு.. ஸ்பெஷல் கவனம் கொடுத்த புதின்! பிளான் இதுதான்
டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்திருக்கும் புதின், இன்று செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் மேம்படுத்தப்படும், இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும் என்று கூறியுள்ளார். கூடங்குளம் குறித்து புதின் பிரத்யேக கவனம் எடுத்திருப்பதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
கூடங்குளம் திட்டம் கடந்த 1988ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவுக்கும் இடையே ஒப்பந்தமாக உருவானது. சோவியத் யூனியனின் சரிவு, அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களைத் தாண்டி, இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனும் அணு உலை திட்டம் போடப்பட்டது. ஆனால், விலை நிர்ணயம் மற்றும் பொறுப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் இந்த திட்டங்கள் காகிதத்திலேயே நின்றுவிட்டன.

தற்போது இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரே வெளிநாட்டு அணுமின் நிலையமாக கூடங்குளம் அணுமின் நிலையம் திகழ்கிறது. கூடங்குளத்தில் மொத்தம் 6 யூனிட்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் 2 யூனிட்களில் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3வது யூனிட்டில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்று கூடங்குளத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சிறப்பு விமானம் மூலம் இந்த எரிபொருளை ரஷ்யா அனுப்பி வைத்திருக்கிறது.
வழக்கமான எரிபொருட்கள் 12 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். ஆனால், ரஷ்யாவின் புதிய எரிபொருள் 18 மாதம் வரை தாங்கும் திறன் கொண்டது. இந்த எரிபொருளை ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் வழங்கியுள்ளது. இந்தியா 2070க்கு கார்பன் உமிழ்வை 0 நிலைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த உதவி இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. திட்டமிட்டபடி 6 யூனிட்களும் செயல்பட்டால் கூடங்குளத்திலிருந்து தடையில்லாமல் 6000 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
அதே நேரம், ரஷ்யாவுக்கும் இந்த உதவியால் பலன் இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நாம் குறைத்திருக்கிறோம். உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இதனால், ரஷ்யாவின் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தியாவுடனான எரிபொருள் வர்த்தகத்தை மீண்டு உயிர்ப்பிக்க கூடங்குளம் உதவி கைகொடுக்கும் என புதின் நம்புகிறார்.
அதேபோல அமெரிக்காவின் டாலரை பலவீனப்படுத்தும் விஷயத்தில் ரஷ்யா தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்தில் பொதுவான கரன்சியை கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது. சீனா, பிரேசில், ரஷ்யா நாடுகளின் பிளான் இது. இதனால் இந்தியாவுக்கும் லாபம் இருக்கும் என்றாலும், அமெரிக்காவின் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளும் என்பதால் இந்தியா இதில் சைலன்ட்டாக இருக்கிறது. எனவே இந்தியாவை சமாதானப்படுத்தவும் கூடங்குளம் திட்டம் கை கொடுக்கும் என்று ரஷ்யா நம்புகிறது.












Click it and Unblock the Notifications