1,900 கோடியில் சாலை போட்டுவிட்டு.. ரூ.8000 கோடி சுங்க கட்டணம் ஏன்? 2 நொடி யோசித்து கட்கரி தந்த பதில்
டெல்லி: சுங்கச்சாவடி கட்டணம் குறித்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சில முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது சாலை அமைக்க ஆகும் செலவுகளை விட பல இடங்களில் ஏன் பல மடங்கு அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு அவர் விரிவான பதிலை அளித்துள்ளார்.
மத்திய அரசு நெடுஞ்சாலைகளை அமைக்கும் போது, அதற்கு ஆகும் செலவைச் சுங்கச்சாவடி அமைத்து சுங்கக் கட்டணம் மூலம் வசூலிக்கிறது. சாலை வரி இருக்கும் போது சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது.

சுங்கக் கட்டணம்: மேலும், பல பகுதிகளில் சாலை அமைக்க ஆன செலவுகளை விடப் பல மடங்கு அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது புகாரும் எழுந்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு இடத்தில் சாலை அமைக்க ரூ.1,900 கோடி மட்டுமே செலவாகும் போது, ரூ.8,000 கோடி வரை சுங்கச் சாவடி கட்டணமாக வசூலிக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கட்கரி, "ஒரே நாளில் அனைத்து சுங்கச்சாவடி கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
சுங்கச்சாவடி கட்டணம் அமைப்பதற்கு முன்பு பின்பு என்று இரண்டு வகையில் செலவுகள் உள்ளன. அதை எல்லாம் அரசே தான் ஏற்க வேண்டி இருக்கிறது" என்றார். மேலும், இந்த விஷயம் தொடர்பாக நிதின் கட்கரி ஒரு உதாரணத்தையும் சொல்லி விளக்கியுள்ளார்.
என்ன காரணம்: அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் ஒரு கார் அல்லது வீட்டை ரொக்கமாக வாங்கினால்.. அதன் விலை ரூ. 2.5 லட்சமாக இருக்கும். அதே பொருளை 10 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றால், அதன் விலை ரூ. 5.5 முதல் ரூ. 6 லட்சமாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் வட்டியும் கட்ட வேண்டும். நமது நாட்டில் பல நேரங்களில் கடன் வாங்கியே நெடுஞ்சாலைகளை அமைக்கிறோம். இதன் காரணமாகவே சுங்கக் கட்டணம் அதிகம் வசூலிக்கிறோம்" என்றார்.
ஏகப்பட்ட பிரச்சினைகள்: டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை சுங்கச் சாவடி கட்டணம் வசூல் குறித்துப் பேசிய கட்கரி, "இந்த சாலை அமைக்கக் கடந்த 2009-ல் யுபிஏ அரசு முடிவு செய்தது. மொத்தம் 9 வங்கிகள் இத்திட்டத்திற்குக் கடன் கொடுத்திருந்தன. இருப்பினும், சாலை அமைப்பதில் பல பிரச்சினைகள் இருந்தனர். பல காண்டிராக்டர்கள் பாதியிலேயே விலகிவிட்டனர்.
வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதன் பின்னர் புதிய கண்டிராக்டர்களிடம் ஒப்பந்தம் போட்டோம். அதிலும் சிக்கல் வந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் வந்துவிட்டன. 6 வழிச் சாலை அமைக்க வேண்டும் என்றால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எனவே, அதைச் செய்தோம். இப்படிப் பல சிக்கல்கள் இருந்தன. இதற்கு நேரமும் பணமும் அதிகம் செலவானது" என்றார்.
சமீபத்தில், இந்த ராஜஸ்தானில் டெல்லி- ஜெய்பூர் நெடுஞ்சாலையில் குறித்து ஆர்டிஐ-இல் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதில் மனோகர்பூர் டோல் பிளாசாவில் இருந்து சுமார் 8,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகப் பதில் கூறப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலை அமைக்க சுமார் 1,900 கோடி ரூபாய் மட்டுமே செலவான நிலையில் 8,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே நிதின் கட்கரியிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
நிதின் கட்கரி பேச்சு: தொடர்ந்து பேசிய கட்கரி, "இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது.. இது சீக்கிரமாக மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நரேந்திர மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் 100 நாட்களில், 51,000 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு மேஜர் சாலைத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முடிக்க இலக்கு வைத்து வேலை செய்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications