மும்பையில் பாலியல் தொல்லை.. ஆனாலும் இந்தியாவை வெறுக்காத தென் கொரிய பெண்.. என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: தென்கொரியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் மும்பையில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அவர் இப்போது இந்திய இளைஞர்கள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தென் கொரியைச் சேர்ந்த யூடியுபர் மியோச்சி. இவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, அந்த நாட்டின் அழகையும் பண்பாட்டையும் வீடியோவாக எடுத்து, தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அதன்படி சமீபத்தில் அவர் இந்தியா வந்திருந்தார். மும்பைக்குச் சென்ற அவர், அங்கிருந்தபடியே லைவ் ஸ்டிரீம் செய்து கொண்டிருந்தார். அப்போது தான் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

கொரியன் யூடியூபர்
அதாவது, மும்பையில் இரவு நேரத்தில் அந்த பெண் நடந்து கொண்ட லைவ் ஸ்டிரீமில் வீடியோ போட்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த இருவர், பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். இடுப்பிலும் தோளிலும் கைவைத்துள்ளனர். மேலும், மியோச்சியை முத்தமிடவும் முயன்றனர். இது அனைத்தும் லைவ் ஸ்டிரீமிலேயே வந்தது. இந்த வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், அவர் மும்பை போலீசார் சம்மந்தப்பட்ட இருவரையும் உடனடியாக கைது செய்தனர்.

நன்றி சொன்ன மியோச்சி
இதற்கிடையே யூடியுபர் மியோச்சி இந்த விவகாரத்தில் தனக்கு உதவிய இரு இளைஞர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். போலீஸ் நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த ஆதித்யா மற்றும் அதர்வா இருவரையும் நேரில் சந்தித்த மியோச்சி, அவர்களுடன் லன்ச் சாப்பிட்டுள்ளார். இவர்களில் அதர்வா லைவ் ஸ்ட்ரீமில் அந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைப் பார்த்த உடன், அந்த இடத்திற்கு நேரடியாகவே சென்று மியோச்சியை காப்பாற்றச் சென்றுள்ளார். மற்றொருவர் தான் இதை மும்பை போலீசாரை டேக் செய்து பதிவிட்டது.

இந்தியன் ஹீரோஸ்
இவர்கள் இருவரும் விரைந்து செயல்பட்டதில் மியோச்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவரும் பாதுகாப்பாக ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். இவர்களுடன் லன்ச் சாப்பிட்ட மியோச்சி தனது ட்விட்டரில், "ஒரு வழியாக இந்திய ஹீரோக்களை மீட் செய்துவிட்டேன். இவர்கள் தான் உண்மையான இந்திய ஜென்டில்மேன்கள்" என்று பதிவிட்டிருந்தார். யூடியுபர் மியோச்சி இது தொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோவை பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஹார்ட்விட்டு வருகின்றனர். மேலும், அந்த இரு இளைஞர்களையும் பாராட்டி வருகின்றனர்.

என்ன நடந்தது
முன்னதாக தனக்கு மும்பை சாலைகளில் ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக அந்த பெண் யூடியூபர் கூறுகையில், "நான் உலகின் பல நாடுகளுக்கும் சென்று வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன். ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், உணவு முறை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மும்பையில் ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்தச் சம்பவம் நடந்தது. இருவரும் என்னைப் பார்த்து ஐ லவ் யூ எனச் சொல்லி தவறாக நடக்க முயன்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்துள்ளன. மற்ற நாடுகளிலும் இதுபோன்ற சம்பவத்தை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

உதவிக்கு வந்த நண்பர்கள்
என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவர்கள், என் தோளில் கை போட்டு முத்தமிட முயன்றனர். அதைத் தடுத்த போது, இடுப்பைத் தொடவும் முயன்றனர். என்னைப் பின்தொடர்ந்து வந்து நம்பர் கேட்டார்கள். அவர்கள் இரண்டு பேராக இருந்ததால், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால் பொய்யான நம்பர் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். மற்ற நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. ஆனால், இங்குப் பல நண்பர்கள் எனக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

இந்தியா பிடித்துள்ளது
மும்பை போலீசாரும் விரைவாக நடவடிக்கை எடுத்தனர். சிலர் அந்தச் சம்பவத்தில் என் மீது தவறு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களிடம் ரொம்பவே நட்பாகப் பேசியதாகவும் இதனால் தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்றார்கள். இதுபோன்ற கருத்துகளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆனாலும், இந்தியா எனக்குப் பிடித்துள்ளது. இன்னும் 3 வாரம் இந்தியாவில் இருக்கப் போகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications