தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டு வர முயன்றது ஏன்... கேள்வி பதில் வடிவில் மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு விவாகரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அரசு கேள்வி பதில் வடிவில் விளக்கம் அளித்துள்ளது. அந்த கேள்வி பதிலில் ஒரு இடத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கும். தென்மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறையாது. உதாரணமாக, தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு இரண்டையும் மத்திய அரசு நிறைவேற்ற விரும்பியது.இதற்காக நாடாளுமன்றத்தில் அண்மையில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டியது. ஆனால் இந்த சட்டம் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் தான் சாத்தியம். இதன் காரணமாக இந்த சட்டம் நிறைவேறவில்லை. தோல்வி அடைந்தது. தொகுதி மறுவரைறை என்ற பெயரில் தென்மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் மசோதா தோல்வி அடைந்தது. இந்நிலையில் தொகுதி மறுவரைறை சட்டம் கொண்டுவர முயன்றது ஏன் என கேள்வி பதில் வடிவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனை அப்படியே பார்ப்போம்.

கேள்வி: இப்போது 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தது ஏன்?
பதில்: 2026-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடக்கும் தொகுதி மறுவரையறை அடிப்படையில்தான் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். அதற்கு மத்திய அரசு காத்திருந்தால், 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காது. எனவே, அந்த நிபந்தனையை நீக்குவதற்காக மசோதா கொண்டுவருவது அவசியமாகிவிட்டது.
தொகுதிகள் உயர்த்தப்படுவது ஏன்
கேள்வி: இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
பதில்: அவை நிறைவேற்றப்பட்டால், 2029-ம் ஆண்டிலேயே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
கேள்வி: ஏன் தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீடு இணைக்கப்பட்டது? தொகுதி எண்ணிக்கை ஏன் உயர்த்த திட்டமிடப்பட்டது?
பதில்: தொகுதி மறுவரையறை என்பது தொகுதிகளின் எல்லையை இறுதி செய்வது. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அது அவசியம். 1976-ம் ஆண்டு, மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 550 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு, மக்கள்தொகை 54 கோடியாக இருந்தது. இன்று 140 கோடியாக உள்ளது.
எனவே, தொகுதி எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது அவசியம். அப்போதுதான் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இப்போது நடக்கும் தேர்தல் பாதிக்கப்படாது
கேள்வி: தொகுதி மறுவரையறை ஆணைய சட்டத்தை மாற்றியமைக்க முயற்சி நடந்ததா? அது தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தலை பாதிக்குமா?
பதில்: எந்த மாற்றமும் திட்டமிடப்படவில்லை. தற்போதைய சட்டசபை தேர்தல்கள் பாதிக்கப்படாது. 2029-ம் ஆண்டுவரை தற்போதைய முறையிலேயே தேர்தல் நடக்கும்.
கேள்வி: மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்துவது ஏன்?
பதில்: விகிதாசார விரிவாக்க அணுகுமுறை அடிப்படையில் திட்டமிடப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத தொகுதி உயர்த்தப்படும். தற்போதைய 543 தொகுதிகளுக்கு அக்கொள்கையைப் பயன்படுத்தினால், தொகுதி எண்ணிக்கை 815 ஆக உயரும். எனவே, தற்போதைய உச்சவரம்பு 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொகுதிகள் உயரும்
கேள்வி: தென்மாநிலங்களோ, சிறிய மாநிலங்களோ பாதிக்கப்படுமா?
பதில்: அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கும். தென்மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறையாது. உதாரணமாக, தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.76 சதவீதத்தில் இருந்து 23.87 சதவீதமாக உயரும்.
கேள்வி: மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் பாதகமாக அமையுமா?
பதில்: இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாகத் தொகுதிகள் அதிகரிப்பதால், ஒன்று மாற்றமின்றி இருக்கும் அல்லது உயரும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கேள்வி: பட்டியல், பழங்குடியினத்தினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமா?
பதில்: இல்லை. அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
கேள்வி: இந்த மசோதாவால் சாதிவாரி கணக்கெடுப்பு தாமதம் ஆகுமா?
பதில்: இல்லை. ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்புக்காக காலமுறையிலான திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
கேள்வி: முஸ்லிம் பெண்களுக்கு ஏன் இடஒதுக்கீடு இல்லை?
பதில்: அரசியலமைப்பு சட்டம், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. சமூக, பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications