மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் திடீர் ரத்து-சீனா ஆதரவு சிங்களர் போராட்ட 'சதி' எதிரொலி?
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த ராஜ்நாத் சிங்குக்கு எதிராக சிங்களர் போராட்டங்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் 2023 செப்டம்பர் 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது ராஜ்நாத் சிங் இலங்கை அதிபரும், பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் . இலங்கையுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள நுவரெலியா மற்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிசெய்யும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கை ஊடகங்கள், சிங்களர் தரப்பில் ராஜ்நாத்சிங்குக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்ததால் இப்பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு சீனா ஆராய்ச்சிக் கப்பல் என்ற போர்வையில் உளவு கப்பலை அனுப்புகிறது. இந்த உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு ரணில் அரசாங்கம் அனுமதி தந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோபத்தில்தான் சீனா ஆதரவு சிங்கள சக்திகள், ராஜ்நாத்சிங்குக்கு எதிரான போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications