"சாமி" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக?
டெல்லி : காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாஜக.,வின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இந்த முழக்கத்தை முன்னிறுத்தியே 2014 லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டு, வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
2019 ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று, மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. தற்போது பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் இருந்து வருகிறது.
மாநிலங்களைப் பொருத்தவரை தற்போது 18 மாநிலங்களில் பாஜக தனித்தும், கூட்டணியில் அங்கம் வகித்தும் ஆட்சி செய்து வருகிறது. லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் மற்ற வடஇந்தியாவில் பலமான கட்சியாக பாஜக இருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களில் காலூன்ற வேண்டும் என்ற பாஜக.,வின் கனவு இப்போது வரை கனவாகவே இருந்து வருகிறது.
வந்தாச்சு தேர்தல்
அசாம், மேற்குவங்கம், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலில் தங்கள் பலத்தை அதிகப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
எங்கு யார் ஆட்சி
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அசாமில் மட்டுமே பாஜக ஆட்சி உள்ளது. தமிழகத்தில் அதிமுக, கேரளாவில் இடதுசாரி கட்சி, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
அசாமில் ஆளும் கட்சி
அசாம் சட்டசபையில் மொத்தமுள்ள 126 உறுப்பினர்களில் பாஜக.,விற்கு 61 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து பாஜக.,வின் பலம் 75 ஆக உள்ளது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் பாஜக.,வே ஆட்சியை பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் ரொம்ப கஷ்டம்
கடந்த 40 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக கேரளா இருந்து வருகிறது. இங்கு 1980 ம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகின்றன. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் ஒருவர் மட்டுமே பாஜக எம்எல்ஏ. இடதுசாரிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பலமான கட்சியாக இருப்பது காங்கிரஸ் கூட்டணி தான். அதனால் இந்த முறையும் கேரளாவில் பாஜக ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
டஃப் கொடுக்கும் தமிழகம்
எவ்வளவு முயன்றாலும் பாஜக.,வால் காலூன்ற, கடும் சவாலான மாநிலமாக இருப்பது தமிழகம் தான். தமிழக அரசியல் வரலாற்றில் பாஜக இதுவரை ஆட்சி அமைத்ததே இல்லை. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் பாஜக.,விற்கு ஒரு எம்எல்ஏ., கூட கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக பலமுறை முயன்றும் அது முடியாமல் போனது.
கூட்டணியில் சீட் கிடைக்க வாய்ப்பு
2011 முதல் அதிமுக.,வே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 1969 க்கு பிறகு அதிமுக, திமுக கட்சிகளே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேற்குவங்கத்தில் கடும் போட்டி
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸிற்கும், பாஜக.,விற்கும் கடும் போட்டி நிலவுகிறது. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டசபையில் பாஜக.,விற்கு 16 எம்எல்ஏ.,க்கள் மட்டுமே உண்டு. இருந்தாலும் கடந்த சட்டசபை தேர்தலை விட, 2019 லோக்சபா தேர்தலில் பாஜக.,வின் ஓட்டு சதவீதம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் ஊழல் புகார்களால் மம்தா அரசிற்கு எதிராக அதிருப்தி நிலவுவதால், உதிரி கட்சிகளை இணைத்து இந்த முறை மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது.
புதுச்சேரியில் பிள்ளையார் சுழி
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை இல்லா விட்டாலும் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 5 எம்எல்ஏ.,க்கள் மற்றும் 3 நியமன எம்எல்ஏ.,க்களை வைத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது. வரும் தேர்தலில் அதிமுக அல்லது என்ஆர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கிரண்பேடியை வைத்து நாராயணசாமி அரசுக்கு குடைச்சல் கொடுத்து வந்த பாஜக, தேர்தல் நெருங்கும் சமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கவிழ்த்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.